சக்தி மேகனா
கடந்த ஆண்டு கொவிட்-19 கிருமித்தொற்றுச் சூழலின்போது, இணைய வகுப்புகளின் மூலம் நண்பர்களுடன் இணைவது பல்கலைக்கழக மாணவர்களுக்குச் சற்று சிரமமாக இருந்தது. தனிமை காரணமாக சில மாணவர்கள் மனநலப் பிரச்சினைகளுக்கும் ஆளாகினர். மாணவர்கள் சிலர் இதற்குத் தீர்வு காணும் வகையில் 'எடியூகெதர்' எனும் கற்றல் செயலி / இணையத்தளத்தை உருவாக்கும் திட்டத்தை உருவாக்கினர்.
சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த அந்த மாணவர்கள், மாணவர்களைத் தங்கள் நண்பர்களுடன் மெய்நிகராக இணைக்கும் நோக்கத்தில் ஏற்படுத்தியுள்ள 'எடியூகேதர்' எனும் இந்தத் திட்டம், நீடித்த நிலைத்தன்மையையும் தொழில்நுட்பத்தையும் இணைக்கும் 'சஸ்டேனத்தான்' போட்டியில் முதல் பரிசைத் தட்டிச் சென்றது.
கைபேசியில் பதிவிறக்கம் செய்யக்கூடிய இந்தச் செயலியில் பாடக் குறிப்புகளும் இடம்பெறும். மேலும், மாணவர்கள் தங்கள் ஐயங்களைத் தீர்த்துக்கொள்வதற்கு வசதியும் ஏற்படுத்தித் தரப்படும்.
உயர்கல்வி நிலைய மாணவர் களுக்கான 'சஸ்டேனத்தான்' போட்டியை இரண்டாவது ஆண்டாக 'டாடா ஆலோசனைச் சேவைகள்' சிங்கப்பூரில் நடத்தியுள்ளது.
இளையர்கள் பொதுத்துறை, தனியார் துறையினருடன் இணைந்து, தொழில்நுட்பத்தின் உதவியுடன் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்பதே இப்போட்டியின் முக்கிய நோக்கம்.
இறுதிச் சுற்றில் ஐந்து உயர்கல்வி நிலையங்களைச் சேர்ந்த ஐந்து குழுக்கள் போட்டியிட்டன.
சாங்கி தொழிற்பேட்டையில் உள்ள 'டாடா' நிறுவன வளாகத்தில் கடந்த புதன்கிழமையன்று இறுதிச் சுற்றுப் போட்டியும் அதற்கான பரிசளிப்பும் நடைபெற்றன.
நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிபர் ஹலிமா யாக்கோப், "சமுதாயத்தை வடிவமைப்பதில் இளையர்கள் முக்கியப் பங்காற்றுகின்றனர். உலகளாவிய சவால்களுக்குத் தீர்வுகள் காண்பதற்கு, 'சஸ்டேனத்தான்' ஒரு சிறந்த தளமாக உள்ளது," என்று கூறினார்.
"இப்போட்டியில் கலந்துகொண்டதால் ஏட்டுக்கல்வியாக பயின்றதை நடைமுறைப்படுத்தும் வாய்ப்புக் கிடைத்தது. மற்றவர்களுடன் இணைந்து வேலை செய்யவும் பலர் முன்னிலையில் ஊக்கத்துடன் பேசவும் நாங்கள் கற்றுக்கொண்டோம்," என்றனர் வெற்றி பெற்ற குழுவினர்.
"மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவதுடன் இதுபோன்ற போட்டிகளிலும் பங்கேற்க வேண்டும். அப்பொழுதுதான் முழுமையான வளர்ச்சியைப் பெற முடியும்," என்று அம்மாணவர்கள் கூறினர்.
வெற்றி பெற்ற முதல் மூன்று குழுக்களுக்குத் தலா $5,000, $3,000, $2,000 பரிசுத்தொகைகள் தரப்பட்டன. மேலும், தாங்கள் முன்மொழிந்துள்ள செயலி/இணையத்தளத்தை உருவாக்கும் வாய்ப்புகளும் மாணவர்களுக்கு வழங்கப்படும்.

