கி. ஜனார்த்தனன்
சிறு வயதில் தம் தாய் தந்தை இருவரையும் இழந்தவர் வில்வம் ராமு, 36. உயர்நிலைப் பள்ளியில் படித்தபோது கணிதப் பாடத்தில் தோல்வி கண்டார். ஆனால் தாம் மாணவராகப் பயின்ற அதே நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரியில் இன்று ஒரு விரிவுரையாளராக இருக்கிறார்.
கட்டுமான ஊழியராகப் பணியாற்றிய வில்வத்தின் தந்தை, ஒருநாள் வீட்டிற்குச் செல்லும் வழியில் திடீரென மயங்கி விழுந்தார்.
அப்போது அவருக்கு 62 வயது. கம்பம் ஒன்றில் தலையில் அடிபட்டது. வெளிக்காயம் எதுவும் இல்லா ததால், அவருக்கு ஒன்றுமில்லை என்று அனைவரும் நினைத்துவிட்டார்கள். ஆனால், இரவில் அவருக்கு வலிப்பு ஏற்பட்டதை அடுத்து கோமா நிலைக்குத் தள்ளப்பட்டார். அதே நாளில் அவர் இறந்தும் போனார்.
இது நடந்தபோது வில்வத்திற்கு ஏழு வயது. இறப்பு என்றால் என்ன என்பதை அந்த வயதில் புரிந்துகொள்ள முடியாத வில்வம், தம்முடைய தாயாருக்கு முழு ஆதரவாக இருக்க வேண்டியிருந்தது.
இல்லத்தரசியாகவே இருந்த அவரின் தாயார், தந்தை இறந்த பிறகு சாலைத் துப்புரவுப் பணியாளராக வேலை செய்ய ஆரம்பித்தார். அந்த வருமானம் போதாததால் வார இறுதி நாள்களில் கேளிக்கை விடுதிகளின் கழிவறைகளைச் சுத்தம் செய்யும் பணியைச் செய்தார்.
வேலைப் பளுவினால் தாயாரால் சிறுவனா தம்மைச் சரியாகக் கவனித்துக்கொள்ள இயலாததால் நண்பர்களுடனே தாம் அதிக நேரம் செலவழித்ததாக திரு வில்வம் கூறினார்.
இதனால் வில்வம் படிப்பில் நாட்டமில்லாமல் இருந்தார். 2000ஆம் ஆண்டில் வில்வத்துக்கு பதினாறு வயதாக இருந்தபோது அந்தத் தாயாரும் நுரையீரல் புற்று நோயால் இறந்துவிட்டார்.
"தமிழகத்தின் மயிலாடுதுறையில் பிறந்த என் தந்தை, சிங்கப்பூரரான என் தாயாரைத் திருமணம் செய்துகொண்டார். அன்பாகவும் பிறருடன் சுமுகமாகவும் பழகக்கூடியவர். என் அப்பாவுடன் இருக்கும்போது நான் சுதந்திரத்தை உணர்ந்தேன்," என்றார் வில்வம்.
"அவருக்குப் பிறகு என் அம்மாவும் இறந்தபோதுதான் தனிமையை உணர்ந்தேன். அந்த உணர்வு மிகவும் வேதனைமிக்கது. அப்போது கோவிலுக்குச் சென்று இறை வழிபாட்டின்வழி ஆறுதல் அடைந்தேன்," என்றார் வில்வம்.
இதையடுத்து, வேறு பராமரிப்பு ஏற்பாட்டில் வில்வம் வளர்ந்தார். அதே ஆண்டில் பொதுக்கல்விச் சான்றிதழ் வழக்கநிலைத் தேர்வை எழுதிய வில்வம், பின்னர் தேசிய தொழிற்கல்விக் கழகத்தின் மத்திய கல்லூரியில் சேர்ந்தார்.
அங்கு 'அலுவலகத் திறன்கள்' துறையில் படிப்பை மேற்கொண்டார். கசப்பான சில அனுபவங்களுக்குப் பிறகு, வேறு பாடத்திற்கு மாற முடிவு செய்தார் அவர்.
தொடக்கத்தில் தாதிமைத் துறைக்கு மாற எண்ணிய வில்வம், அதற்கான போதிய மதிப்பெண்களைப் பெறாததால் வேறு துறையைப் பற்றி யோசித்தார்.
பிள்ளையாரின் திருவுருவங்களை வரைவது, பூஜை அறை அலங்காரங்களைச் செய்வது போன்றவற்றில் விருப்பம் இருந்ததால் வரைகலை வடிவமைப்புத் துறையில் சேர முடிவெடுத்தார்.
"என் அப்பா சிற்பக் கலையில் கைதேர்ந்தவர். எனக்கும் வடிவமைப்பில் ஆர்வம் உள்ளது. இதனால் வடிவமைப்பு சார்ந்த தொழிலைத் தேர்ந்தெடுக்கலாம் என எண்ணினேன்," என்று அவர் கூறினார். 2009ஆம் ஆண்டில் நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரியின் வடிவமைப்புப் பள்ளியில் சேர்ந்தார். கல்லூரியின் தலைசிறந்த 15% மாணவர்களில் ஒருவராகத் தேர்ச்சி பெற்ற அவர், தேசிய பல்கலைக்கழகத்தின் தொழில்துறை வடிவமைப்புப் பள்ளியில் சேர்ந்தார்.
2015ஆம் ஆண்டில் தாம் பயின்ற அதே நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரிக்குள் ஆசிரியராகக் காலடி வைத்தார். நினைத்ததைச் சாதித்த வில்வம், கனவுகளைத் துணிந்து துரத்திப் பிடிக்கும்படி இளையர்களுக்கு அறிவுறுத்துகிறார்.
"உங்களை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். தோல்விகள் ஏற்ப டும்போது அவற்றை ஏற்றுக்கொண்டு தொடர்ந்து நடைபோடுவது முக்கியம்.
"உயர்நிலைப் பள்ளியில் கணக்குப் பாடத்தில் தோல்வி அடைந்த நான் இப்போது பலதுறைத் தொழிற்கல்லூரியில் ஆசிரியராக இருக்கிறேன். உங்களுக்கு வாய்ப்புகள் ஏராளம் வரும். பிறர் சொல்வதை அப்படியே கேட்டுவிடாமல் எதன் மீது உங்களுக்கு ஆர்வம் உள்ளதோ அதையே தேர்ந்தெடுங்கள்," என்றார் இந்த இளம் விரிவுரையாளர்.
ஆறு ஆண்டுகளாக பரதக்கலையையும் கற்று வருகிறார் வில்வம். நடனம் ஆடும்போது இறுக்கத்திலிருந்து விடுபட்டு ஒருவித சுதந்திரத்தை உணர்வதாகக் கூறுகிறார் அவர்.