ஓசிபிசி வங்கி, இணைய மோசடியால் பணம் இழந்த தனது வாடிக்கையாளர்களுக்கு நல்லெண்ண அடிப்படையில் பணம் அளிக்கத் தொடங்கியுள்ளது.
ஒவ்வொரு தனிப்பட்ட சம்பவத்தின் தனிப்பட்ட சூழலைக் கருத்தில் கொண்டு சரிபார்த்த பிறகே, பணம் அளிக்கப்படுவதாக வங்கி கூறியது.
இதுவரை 30க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் பணத்தைப் பெற்றுகொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஜனவரி 8ஆம் தேதியிலிருந்து பாதிக்கப்பட்ட தனது வாடிக்கையாளர்களுக்குப் பணம் அளித்துவருவதாக வங்கி சொன்னது.
அதோடு, தனது வங்கிக் கட்டமைப்புகள் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவை ஊடுருவப்படவில்லையென்றும் வங்கி தெரிவித்தது.
மேலும், "டிஜிட்டல் டோக்கன்" எனப்படும் மின்னியல் வங்கிச் சேவைக்கான கருவியைத் தொடர்ந்து பயன்படுத்த வங்கி முடிவெடுத்திருக்கிறது.
முன்னதாக, கருவிகளைப் பயன்படுத்துவதை நிறுத்தப்போவதாக அது கூறியிருந்தது.
இச்சம்பவங்களை அடுத்து, மோசடிகளுக்கு எதிராக வங்கிச் செயலியில் விழிப்பாக இருக்குமாறு ஆலோசனை வழங்கப்படுகிறது.
சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் சுமார் 470 பேர், ஒசிபிசி வங்கி சம்பந்தப்பட்ட மோசடிகளுக்கு ஆளனதாக சிங்கப்பூர் காவல் துறை கூறியது.
அதில் குறைந்தது 8.5 மில்லியன் வெள்ளி பறி போனதாகக் தெரிவிக்கப்பட்டது.
முதலில் தங்கள் வங்கிக் கணக்கில் பிரச்சினை உள்ளது என்று குறுந்தகவல் பெற்றதாகப் பாதிக்கப்பட்டவர்கள் கூறினர்.
பிரச்சினையைச் சரிசெய்ய ஓர் இணையப்பக்கத்துக்குச் செல்லுமாறு ஆலோசனை வழங்கப்பட்டது.
அந்த இணையப்பக்கம் ஒசிபிசி வங்கி போன்றே இருந்ததாக பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் கூறினர்.
தங்கள் வங்கிக் கணக்குகளிலிருந்து அனுமதியின்றி பணம் மாற்றபட்டதாகத் தங்களுக்குத் தகவல் வந்த பிறகே தாங்கள் மோசடி செய்யப்பட்டதாக அவர்கள் அறிந்தனர்.
இந்த மோசடிச் சம்பவம் மிக நூதனமான முறையில் நடந்ததாக வங்கி கூறியது.