உலகம் முழுவதும் பேரிடர்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கும் கிராமப்புறப் பகுதிகளுக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்கும் சாதனத்தை சிங்கப்பூரைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று தயாரித்துள்ளது.
மிதிவண்டி டயர்களுக்குக் காற்று நிரப்பும் சாதாரண கருவியைப் போலவே தண்ணீரை வடிகட்டும் இந்தத் சாதனம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கையில் தூக்கிச் செல்லக்கூடிய அளவிற்கு இலகுவாக இருக்கும் இந்தச் சாதனத்தின் பெயர் 'ரோம்ஃபில்டர் பிளஸ்'. இதைத் தயாரிப்பதற்கு 'வாட்டரோம்' நிறுவனத்திற்கு ஈராண்டுகள் தேவைப்பட்டது.
இதுநாள் வரை, 'ரோம்ஃபில்டர் பிளஸ்' மற்றும் அதன் துணைச் சாதனங்கள் 38 நாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன. இதன்மூலம் ஏறக்குறைய 207,000 பேருக்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வழங்கப்படுகிறது.
தன்னுடைய முயற்சிக்காக அந்த நிறுவனத்திற்கு திங்கட்கிழமை (ஜனவரி 17) 'தண்ணீர் வெற்றியாளர்' விருது வழங்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு சிற்றரசுகள் ஏற்பாடு செய்த விருது நிகழ்ச்சி ஒன்றில் அவ்விருது வழங்கப்பட்டது.

