கிருமிப் பரவல் சூழலை வெற்றிகரமாக கடப்பதற்காக மட்டுமின்றி பருவநிலை மாற்றம் போன்ற உலகளாவிய பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதற்கும் ஒத்துழைத்து செயல்படும் வலுவான உணர்வு ஓர் முக்கிய அம்சம் என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் கூறியுள்ளார்.
இளம் விஞ்ஞானிகளிடம் மெய்நிகராகப் பேசிய திரு ஹெங், அமெரிக்க விஞ்ஞானி இயூனிஸ் ஃபுட் 1856ஆம் ஆண்டு கரியமில வாயு எவ்வாறு சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் என்பதைக் கண்டுபிடித்த பிறகு ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள் பருவநிலை தொடர்பில் ஆற்றிய பங்கைச் சுட்டினார். இது, உலகளவில் வெப்பநிலையை எவ்வாறு பாதிக்கக்கூடும் என்பது குறித்து விஞ்ஞானிகள் கணித்ததையும் அவர் குறிப்பிட்டார்.
"இன்றைய காலகட்டத்தில் இவ்வளவு தகவல்கள் இருக்கும்போது பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தை நாம் விரிவாக வெளிப்படுத்தலாம். மற்ற துறைகளில் விஞ்ஞானிகள் எளிதில் பயன்படக்கூடிய சுற்றுச்சூழலுக்கு உகந்த தீர்வுகளைக் கண்டுபிடித்துள்ளனர் - சூரிய சக்தி, காற்று ஆகியவற்றை உபயோகிக்கின்றனர், ஹைட்ரஜனையும் அதிகமாகப் பயன்படுத்தி வருகின்றனர்." என்று திரு ஹெங் கூறினார்.
"புதிய கண்டுபிடிப்புகளும் புத்தாக்க முயற்சிகளும் சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்காமல் மனிதர்களின் வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளன," என்றும் அவர் சொன்னார். ஏற்கெனவே பதிவுசெய்யப்'ஜிவைஎஸ்எஸ்' எனும் உலக இளம் விஞ்ஞானிகள் சந்திப்பின் தொடக்க உரையில் திரு ஹெங் இவ்வாறு பேசினார்.
இவ்வாணடுக்கான 'ஜிவைஎஸ்எஸ்' சந்திப்பு மெய்நிகராக நடைபெறுகிறது. ஆண்டுதோறும் நடைபெற்றுவரும் இந்தச் சந்திப்பு நேற்று தொடங்கியது.
இது, வரும் வெள்ளிக்கிழமை வரை நடைபெறும்.
தேசிய ஆய்வு நிறுவனம் நடத்தும் இந்நிகழ்ச்சியில் பிரபலமான 21 விஞ்ஞானிகள் இடம்பெறுவர். மேலும், நொபெல் விருதைப் பெற்றவர்கள், 40 நாடுகளைச் சேர்ந்த 800க்கும் அதிகமான இளம் ஆய்வாளர்கள் ஆகியோரும் பங்கேற்பர்.
இந்த சந்திப்பு இவ்வாண்டு தனது 10ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது. முன்னாள் அதிபர் டோனி டான் கெங் யாமும் நிகழ்வில் கலந்துகொண்டார்.

