புதிய தனியார் வீட்டு விற்பனை 58 விழுக்காடு குறைந்துள்ளது. சென்ற மாதம் பிற்பாதியில் சொத்துச் சந்தைத் தணிப்பு நடவடிக்கைகள் இதற்குக் காரணம்.
சென்ற மாதம் 650 புதிய தனியார் வீடுகள் விற்கப்பட்டன. கடந்த நவம்பர் மாதம் இந்த எண்ணிக்கை 1,547ஆகப் பதிவானது.
நகர மறுசீரமைப்பு ஆணையம் வெளியிட்ட தகவல் இந்த விவரங்களைத் தெரிவித்தது. 'ஈசி' எனும் எக்சிக்கியூட்டிவ் கூட்டுரிமை வீட்டுப் பரிவர்த்தனைகள் கணக்கில் எடுக்கப்படவில்லை.
ஆண்டுக்காண்டு அடிப்படையில் புதிய தனியார் வீட்டு விற்பனைகள் 46.6 விழுக்காடு சரிந்தன. 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் விற்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 1,217.
சொத்து மேம்பாட்டாளர்கள் சென்ற மாதம் 383 புதிய வீடுகளை மட்டுமே விற்பனைக்கு விட்டனர். சொத்துச் சந்தை தணிப்பு நடவடிக்கைகளின் தாக்கத்தை ஆராயக் காத்திருப்பதாக அவர்கள் கூறினர். கடந்த நவம்பரில் பதிவானதைக் காட்டிலும் சென்ற மாதம் விற்பனைக்கு விடப்பட்ட புதிய தனியார் வீடுகளின் எண்ணிக்கை 70 விழுக்காடு குறைந்தது.
ஆண்டுக்காண்டு அடிப்படையில் டிசம்பர் மாத எண்ணிக்கை 71.6 விழுக்காடு சரிந்தது.
சென்ற ஆண்டு முழுவதும் 13,118 புதிய தனியார் வீடுகள் விற்கப்பட்டன. எட்டு ஆண்டுகளில் இத்தனை புதிய தனியார் விட்டுப் பரிவர்த்தனைகள் இடம்பெற்றது இதுவே முதல் முறை. இதற்குமுன் 2013ஆம் ஆண்டு 14,948 புதிய தனியார் வீடுகள் விற்கப்பட்டன.
சொத்துச் சந்தை தணிப்பு நடவடிக்கைகள், ஆண்டு இறுதி விடுமுறை ஆகிய காரணங்களால் சென்ற மாதம் தனியார் வீட்டு விற்பனை பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று ஆரஞ்சுடீ அன்ட் டை சொத்து நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் கிரிஸ்டீன் சுன் கூறினார். சொத்துச் சந்தை தணிப்பு நடவடிக்கைகளின் ஒட்டுமொத்த தாக்கத்தை இந்தப் புள்ளி விவரங்கள் வெளிப்படுத்தாமல் இருக்கலாம் என்றும் அவர் சுட்டினார்.
பொதுவாக டிசம்பர் மாதத்தில் விற்பனை நவம்பரில் பதிவானதைக் காட்டிலும் குறைவாகவே இருக்கும் என்று ஹட்டன்ஸ் ஏஷியா நிறுவனத்தின் மூத்த இயக்குநர் லீ சீ டெக் சொன்னார்.

