செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
24fc4734-21aa-46bc-b177-834aec6c4f1f
-

சிங்கப்பூர் நிறுவனத்திற்கு விருது

உலகம் முழுவதும் பேரிடர்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கும் கிராமப்புறப் பகுதிகளுக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்கும் சாதனத்தை (படம்) சிங்கப்பூரைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று தயாரித்துள்ளது. மிதிவண்டி டயர்களுக்குக் காற்று நிரப்பும் சாதாரண கருவியைப் போலவே தண்ணீர் சுத்திகரிக்கும் இந்த சாதனம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கையில் தூக்கிச் செல்லக்கூடிய அளவிற்கு இலகுவாக இருக்கும் இந்தச் சாதனத்தின் பெயர் 'ரோம்ஃபில்டர் பிளஸ்'. இதைத் தயாரிப்பதற்கு 'வாட்டரோம்' நிறுவனத்திற்கு ஈராண்டுகள் தேவைப்பட்டது. தனது முயற்சிக்காக இந்நிறுவனத்திற்கு 'தண்ணீர் வெற்றியாளர்' விருது வழங்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு சிற்றரசுகள் ஏற்பாடு செய்த விருதி நிகழ்ச்சியில் அவ்விருது வழங்கப்பட்டது.

சொகுசு வாகன விற்பனை அதிரடி

சொகுசு வாகனங்களிலேயே மிகவும் பிரமாண்டமானவற்றின் விற்பனை கிட்டத்தட்ட 40 விழுக்காடு அதிகரித்துள்ளது. மெக்ரலேரன், லம்போர்கினி, ரோல்-ராய்ஸ், ஃபெராரி போன்றவற்றின் பல வாகனங்களின் விலை 500,000 வெள்ளிக்கும் அதிகம்.

சென்ற ஆண்டு இத்தகைய வாகனங்களில் 360 விற்கப்பட்டன. இந்த எண்ணிக்கை, 2020ஆம் ஆண்டு விற்கப்பட்டதைவிட 38.5 விழுக்காடு அதிகம். இவற்றில் வாடிக்கையாளர்களிடையே ஆகப் பிரபலமாக இருந்தது பென்ட்லி என்று நிலப்போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.

கொவிட்-19 விதிமுறையை

மீறியவருக்குச் சிறை

உணவு விநியோக நிறுவனமான டிலிவரூவிற்கு வேலை செய்த ஓட்டுநர் ஒருவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 32 வயது சிங்கப்பூரரான லுக்மானுல் ஹக்கிம் முகம்மது தாஹாவிற்கு 12 மாதச் சிறைத் தண்டனையும் ஆறு பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.

கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட லுக்மானுல், வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை மீறி மூன்று முறை தனது மோட்டார் சைக்கிளில் உணவை விநியோகம் செய்தார். இவருக்கு சட்டவிரோத ஆயுதங்களைக் கொண்ட பொட்டலத்துடனும் தொடர்புள்ளது. கொவிட்-19 விதிமுறைகளை மீறியது, ஆயுதங்கள் விவகாரம் ஆகிய இரண்டின் தொடர்பிலும் லுக்மானுல் மீதிருந்த நான்கு குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன.

863 கிருமித்தொற்று சம்பவங்கள்

சிங்கப்பூரில் நேற்று முன்தின நிலவரப்படி புதிதாக 863 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டதாக சுகாதார அமைச்சு வெளியிட்ட தகவல்கள் தெரிவித்தன.

மொத்த எண்ணிக்கையில் 675 ஓமிக்ரான் வகை கொவிட்-19 கிருமித்தொற்று சம்பவங்கள் இடம்பெற்றன. அவர்களில் 422 பேருக்கு உள்ளூரில் கிருமித்தொற்று ஏற்பட்டது. வாரந்திர கிருமித்தொற்று விகிதம் கடந்த சனிக்கிழமையன்று பதிவானதைவிட சற்று அதிகரித்து 1.49ஆகப் பதிவானது.