வீட்டிலிருந்து வேலை செய்வது பரவலாகி வரும் வேளையில் நல்ல வர்த்தகச் சூழலைக் கொண்டிருப்பதுடன் தரமான வாழ்க்கையையும் வழங்கும் ஆற்றல் சிங்கப்பூருக்கு உள்ளது. அதனால் உலகளவில் திறமைசாலிகளை ஈர்ப்பதில் சிங்கப்பூரின் கை ஓங்கியிருக்கிறது.
எனினும், தற்போதைய நிலையின் காரணமாக இதுவரை இல்லாத வகையில் சிங்கப்பூரால் திறமைசாலிகளை ஈர்க்கமுடிந்தாலும் இது ஏற்றத்தாழ்வையும் அதிகரிக்கக்கூடும் என்று 'சிங்கப்பூர் கண்ணோட்டம்' கலந்துரையாடலில் கலந்துகொண்டவர்கள் கூறினர். அதனால் சில சமூக அம்சங்கள் மேம்படுவதற்கு ஏற்றவாறே பொருளியல் சாதனைகள் இடம்பெறவேண்டும் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
ஹார்வர்ட் பல்கலைக்கழக பொருளியல் நிபுணர் எட்வர்ட் கிலேசர், சிங்கப்பூர் வர்த்தக தொழில் அமைச்சின் நிரந்தரச் செயலாளர் கேப்ரியல் லிம் உள்ளிட்டோர் கலந்துரையாடலில் பங்கேற்றனர். கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவலால் மக்களின் வாழ்க்கைமுறையும் வேலை செய்யும் விதமும் மாறினாலும் சிலர் எதிர்பார்ப்பதுபோல் அலுவலகங்கள் முற்றிலும் தேவைப்படாமல் போகாது என்றும் கலந்துரையாடலில் குறிப்பிடப்பட்டது.

