கொவிட்-19 பரிசோதனை செய்து, வீட்டில் இருக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டும், வேலைக்குச் சென்ற ஆடவருக்கு ஐந்து வாரச் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
அ. ரஹிம் எம். தாஹா எனும் 59 வயது சிங்கப்பூரர், கொவிட்-19 விதிகளை மீறிய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.
பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் வேலை பார்த்துவந்த ரஹிம், தவறாமல் வேலைக்குச் சென்றால் கூடுதல் ஊதியமாக $100 கிடைக்கும் என்பதால் வீட்டில் தங்காமல் வேலைக்குச் சென்றிருக்கிறார். அவருடைய மாதச் சம்பளம் $1,500.
கடந்த அக்டோபர் மாதம், உடல்நலமின்னை காரணமாக அவர் ஈசூன் பலதுறை மருந்தகத்திற்குச் சென்றார்.
அவருக்குக் கடும் இருமல் இருந்ததால், கொவிட்-19 பரிசோதனையை எடுத்துக்கொள்ளுமாறு மருத்துவர் ஆலோசனை வழங்கயிருக்கிறார்.
பரிசோதனை முடிவு வரும் வரை அவருக்கு மருத்துவ விடுப்பு தரப்படும் என்றும் கூறப்பட்டது. அதை அறிந்ததும், ரஹிம் பரிசோதனைக்குச் செல்ல மறுத்தார்.
இதனையடுத்து, மருத்துவர் ரஹிம் பற்றி சுகாதார அமைச்சிடம் தெரிவித்தார்.
சம்பவத்துக்கு அடுத்த நாள், சுகாதார அமைச்சு ரஹிமை தொடர்புகொண்டு வேலைக்குப் போகக்கூடாது என்று கூறியது.
அதிகாரிகளின் ஆலோசனையைக் காதில் வாங்கமல், ரஹிம் வேலைக்காகப் பல இடங்களுக்குச் சென்றிருக்கிறார். அதோடு, சக ஊழியர்களுடன் சேர்ந்து உணவும் சாப்பிட்டிருக்கிறார்.
அதே நாள் மாலை, அமைச்சு அதிகாரிகள் அவரை மீண்டும் தொடர்புகொண்டு வீட்டில் இருக்குமாறு நினைவூட்டினர். தாம் வீட்டில்தான் இருப்பதாக ரஹிம் அவர்களிடம் பொய் சொல்லியிருக்கிறார்.
ரஹிம்மின் செயலால் அவரது சக ஊழியர்களுக்குக் கொவிட்-19 கிருமி தொற்றியிருக்கூடும் என அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் கூறினார்.
ரஹிமின் செயலுக்கு அதிகபட்சமாக ஆறு மாத சிறை தண்டனையும் $10,000 அபராதமும் விதிக்கப்பட்டிருக்கலாம்.