சாங்கி விமான நிலைய 5ஆம் முனையத்தின் மேம்பாட்டுக்கான திட்டம் இன்னும் மறுஆய்வு செய்யப்பட்டு வருவதாக போக்குவரத்து அமைச்சு திங்கட்கிழமை (ஜனவரி 17) தெரிவித்துள்ளது.
இந்தத் திட்டத்தை ஈராண்டுகளுக்குத் தள்ளிப்போடுவதாக 2020ஆம் ஆண்டு மே மாதம் போக்குவரத்து அமைச்சு அறிவித்து இருந்தது.
திட்டத்தை எவ்வாறு தொடங்குவது என்பது குறித்துத் தீர்மானிக்கும் முன்னர், விமானப் பயண மீட்சி குறித்து அதிகாரிகள் தெளிவான முடிவெடுக்க இந்தக் காலஅவகாசம் உதவும் என்று அமைச்சு கூறியது.
“இந்தத் திட்டம் குறித்து நாங்கள் மறுஆய்வு செய்து வருகிறோம். 5ஆம் முனையம் குறித்த மேல்விவரம் தயாரானவுடன் அதை நாங்கள் வழங்குவோம்,” என்று அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
2030ஆம் ஆண்டுவாக்கில் 5ஆம் முனையம் கட்டி முடிக்கப்படவிருந்தது. ஏறக்குறைய 667 காற்பந்துத் திடல்களுக்குச் சமமான நிலப் பரப்பளவை அது கொண்டிருக்கும்.
அம்முனையத்தின் தொடக்க கட்டத்தில் ஆண்டுக்கு 50 மில்லியன் பயணிகள் வரை கையாள ஆற்றல் கொண்டிருக்கும் என முன்னதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.