உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான புதிய கல்வித் திட்டத்தின்கீழ் இணையத்தில் தங்களின் நலனைக் காத்துக்கொள்ளக் கற்பிக்கும் பாடங்கள் யதார்த்தத்தை மையமாகக் கொண்டிருக்கும். இணையத்தில் இடம்பெறும் தகாத, மனதைப் புண்படுத்தக்கூடிய அம்சங்களை அடையாளம் காண இந்தப் பாடங்கள் மாணவர்களுக்குக் கைகொடுக்கும் என்று கல்விக்கான துணை அமைச்சர் சுன் சூலிங் தெரிவித்தார். இணையத் துன்புறுத்தல், இணைய விளையாட்டுகளுக்கு அடிமையாவது, பொய்த் தகவல்கள், மோசடி போன்ற பல அபாயங்களை மாணவர்கள் இணையத்தில் எதிர்நோக்குவதாக திருவாட்டி சுன் குறிப்பிட்டார். காம்பஸ்வேல் உயர்நிலைப் பள்ளிக்குச் சென்றபோது அவர் பேசினார்.
"இந்தப் பாடங்களின் வாயிலாக அன்றாட வாழ்க்கையில் இடம்பெறும் நிகழ்வுகளை உதாரணமாக வைத்து சம்பவங்களை நிரூபிக்கும் காணொளிகள், படங்கள் (ஸ்கிரீன்ஷாட்ஸ்) ஆகியவற்றைக் கொண்டு இணையத்தில் எத்தகைய அபாயங்களை எதிர்கொள்ளக்கூடும் என்பதை நமது ஆசிரியர்கள் மாணவர்களுக்குப் புரிய வைப்பர்," என்று சமுதாய குடும்ப மேம்பாட்டு துணை அமைச்சருமான அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
மாணவர்கள் தங்களின் உணர்வுகளைக் கவனித்துக்கொள்ளவேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டிய திருவாட்டி சுன், அதைக் கையாள ஒருவருக்கொருவர் ஆதரவு தரும் கலாசாரம் பள்ளிகளில் உள்ளது என்றும் அதன் மூலம் பேசிக்கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டார். இவ்வாண்டு தொடக்கத்திலிருந்து சிங்கப்பூர் முழுவதும் உயர்நிலை மூன்றைத் தாண்டிய மாணவர்களுக்கு 'சிசிஇ' எனப்படும் நற்குணமும் குடியியலும் கல்வியும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன்கீழ் இணைய நலன் தொடர்பிலான அம்சங்கள் கையாளப்படுகின்றன. 2020ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்ட இத்திட்டம், இணைய நலன் விவகாரங்கள் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாட கூடுதல் நேரத்தை வழங்குகிறது. இதற்கான நேரம் சுமார் 50 விழுக்காடு அதிகரிக்கிறது. 2016ஆம் ஆண்டிலிருந்து நடத்தப்பட்ட மறுபரிசீலனை நடவடிக்கைகளுக்குப் பிறகு மாற்றியமைக்கப்பட்ட 'சிசிஇ' திட்டம் வரையப்பட்டதாக அப்போது கல்வி அமைச்சராக இருந்த ஓங் யி காங் தெரிவித்தார்.
சென்ற ஆண்டு இத்திட்டம் முதலில் உயர்நிலை ஒன்று, இரண்டு மாணவர்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. இவ்வாண்டு உயர்நிலை மூன்றைத் தாண்டிய மாணவர்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

