துமாசெக் அறநிறுவனம் இலவசமாக வழங்கி வரும் ஒரு முறைக்கு மேல் பயன்படுத்தக்கூடிய முகக் கவசங்களை நேற்று மதிய நிலவரப்படி சுமார் 2.2 மில்லியன் குடியிருப்பாளர்கள் பெற்றுக்கொண்டுள்ளனர். குடியிருப்பாளர்கள் முகக் கவசங்களை விநியோகிக்கும் இயந்திரங்களிலிருந்து அவற்றைப் பெற்றுக்கொண்டனர்.
முகக் கவசங்களைப் பெற்றுக்கொள்ள கிட்டத்தட்ட 14,000 பேர் முன்கூட்டியே விண்ணப்பித்ததாகவும் துமாசெக் தெரிவித்தது.
ஆறாவது முறையாக முகக் கவசங்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. தற்போதைய விநியோக நடவடிக்கை, சென்ற வாரம் திங்கட்கிழமையன்று தொடங்கியது.
முகக் கவசங்களை விநியோகிக்கும் இயந்திரங்கள் அனைத்து சமூக மன்றங்கள், 20 பேருந்து முனையங்கள், பிளாசா சிங்கப்பூரா கடைத்தொகுதி உள்ளிட்ட இடங்களில் இருக்கின்றன. தங்களின் அடையாள அட்டையைப் பயன்படுத்தி சிங்கப்பூர் குடிமக்கள் இயந்திரங்களிலிருந்து முகக் கவசங்களைப் பெற்றுக்கொள்ளலாம். தீவு முழுவதும் சுமார் 1,000 முகக் கவச இயந்திரங்கள் உள்ளன.
சில இயந்திரங்களில் கோளாறு இருப்பதாகத் தங்களுக்குத் தகவல் வந்ததென துமாசெக்கின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
பெரும்பாலான வேளைகளில் இயந்திரங்களில் கோளாறு ஏதும் இருந்திருக்காது, முகக் கவசம் தவறான இடத்தில் விழுந்திருக்கும் என்று துமாசெக் சுட்டியது. இயந்திரத்தில் முகக் கவசம் விழவேண்டிய பகுதியின் மூடியை அகற்றிக் கவனமாகப் பார்க்குமாறு அது குடியிருப்பாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
ஓர் இயந்திரத்தில் பிரச்சினைகளை எதிர்கொள்வோர் வேறு இயந்திரத்திற்குச் செல்லலாம் அல்லது மறுநாள் மீண்டும் முயற்சி செய்துபார்க்கலாம் என்று துமாசெக் குறிப்பிட்டது.

