பூச்சி ஒழிப்புப் பணியாளர் ஒருவருக்கு மூன்று வாரங்களாக இருமல் இருந்தது. கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டதாகச் சந்தேகிக்கப்பட்ட அவர், வீட்டில் இருக்குமாறும் கொவிட்-19 பரிசோதனையை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டார்.
ஆனால், 59 வயது ஆ ரஹிம் எம். தாஹாவிற்குத் தனது நிறுவனம் மாதந்தோறும் கூடுதலாக வழங்கும் 100 வெள்ளியை விட்டுக்கொடுக்கும் எண்ணம் இல்லை. அதனால் தொடர்ந்து வேலை செய்தார். மேலும், பல இடங்களுக்குச் சென்றதுடன் சக ஊழியர்களுடன் மதிய உணவருந்தினார்.
கொவிட்-19 விதிமுறையை மீறியதன் தொடர்பில் சுமத்தப்பட்ட ஒரு குற்றச்சாட்டை சிங்கப்பூரரான ரஹிம் ஒப்புக்கொண்டார். அவருக்கு ஐந்து வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
'வெர்மினேட்டர்' நிறுவனத்தில் ரஹிம் பூச்சி ஒழிப்புப் பணியாளராக வேலை செய்தார் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அந்நிறுவனத்தில் அவர் ஒரு குழுவின் மேற்பார்வையாளராக இருந்தார்.
ஆண்டுதோறும் ரஹிமிற்கு வழங்கப்பட்ட சம்பளம் சுமார் 1,500 வெள்ளி. வேலைக்கு நேரத்துடன் செல்வது, மருத்துவ விடுப்பு எடுக்காமல் இருப்பது உள்ளிட்டவற்றைக் கடைப்பிடிக்கும்போது அவருக்கு மாதந்தோறும் அனுகூலமாக கூடுதலாக 100 வெள்ளி வழங்கப்பட்டது.
மூன்று வாரங்களாக இருமல் இருந்ததால் 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஐந்தாம் தேதியன்று அவர் ஈஷூன் பொது மருந்தகத்திற்குச் சென்றார்.
முதலில் கொவிட்-19 பரிசோதனையை மேற்கொள்ள ஒப்புக்கொண்டார். ஆனால் முடிவுகள் வெளிவரும் வரை மருத்துவ விடுப்பில் இருக்கவேண்டும் என்பது தெரிந்தவுடன் அவர் பரிசோதனையை மேற்கொள்ள மறுத்தார்.

