சவால்மிக்க மருத்துவச் சூழல்களை எவ்வாறு கையாள்வது என்பதைச் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள் அறிந்திட, சிங்ஹெல்த் மற்றும் டியூக்-என்யுஎஸ் இணைந்து பாவனைப் பயிற்சி வளாகம் ஒன்றை அமைத்துள்ளன. விளையாட்டுகள் வழி ஊழியர்களின் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் இந்த வளாகம் செயல்படும்.
புதிய வளாகம் காலேஜ் ரோட்டில் அமைந்துள்ள 'அகடேமியா'வில் நேற்று திறக்கப்பட்டது.
நடைமுறைக்கு அப்பாற்பட்ட தீர்வுகள், உண்மை மற்றும் மெய்நிகர் உலகங்களை ஒருங்கிணைக்கக்கூடிய தொழில்நுட்பங்கள், கற்றலை மேம்படுத்தும் விளையாட்டுச் சாதனங்கள் ஆகியவற்றை வளாகம் கொண்டுள்ளது.
"சுகாதாரப் பராமரிப்புப் பயிற்சியின்போது விளையாட்டுகளைச் சேர்ப்பதன் மூலம் கற்பவர்களுக்குச் சவால்மிக்க சூழல்களை ஏற்படுத்தித் தர முடியும். அவர்களால் இதன்வழி பாதுகாப்பான கற்றல் சூழல் ஒன்றில் தங்களின் நுண் சிந்தனைத் திறனை வளர்ப்பதுடன் முடிவெடுக்கவும் நடைமுறைத் திறன்களை மேம்படுத்திக்கொள்வது பற்றியும் அறிவர்," என்று சிங்ஹெல்த் குழு தலைமை கல்வி அதிகாரி பேராசிரியர் சான் சூங் மெங் கூறினார்.
சுகாதாரப் பராமரிப்புத் துறையில் பாவனைப் பயிற்சியின் ஆற்றலை மெருகூட்டும் வகையில் சேர்க்கப்பட்ட இந்த விளையாட்டுஅம்சங்கள் உள்ளதென சுகாதார மூத்த துணை அமைச்சர் கோ போ கூன் தமது உரையில் குறிப்பிட்டார்.
இதனால், இருவழித்தொடர்பு கற்றல் வாய்ப்புகள் ஏற்பட்டு அவற்றின் மூலம் சுகாதாரப் பராமரிப்புத் துறையினரால் தங்களின் கற்றலில் கூடுதல் பொறுப்பேற்றுக் கொள்ள முடியும் என்றார் அவர்.
வெவ்வேறு சுகாதாரப் பராமரிப்புப் பணிகளுக்கேற்ற திறன்களையும் தகவல்களையும் அடிப்படையாகக் கொண்டு 18 விளையாட்டுகளை இப்புதிய 'சிம்ஸ் ஹப்' வளாகம் உருவாக்கி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சுகாதாரப் பராமரிப்புத் துறையினரின் பயிற்சித் தேவைகளை முழுமைபெறச் செய்ய இந்த விளையாட்டுகள் உதவுவதாக சிங்ஹெல்த் டியூக்-என்யுஎஸ் கழகத்தின் இணை இயக்குநரான பேராசிரியர் ஃபாத்திமா லத்தீஃப் கூறினார்.
தற்போது கேகே மகளிர், சிறார் மருத்துவமனை, செங்காங் பொது மருத்துவமனை, சிங்கப்பூர் பொது மருத்துவமனை, சாங்கி பொது மருத்துவமனை ஆகியவற்றைச் சேர்ந்த சுகாதாரப் பராமரிப்புத் துறையினருக்காக புதிய வளாகம் செயல்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
மனிதவளத்தையும் செலவுகளையும் கிட்டத்தட்ட 25% குறைக்கவல்லதாக இந்த விளையாட்டுகள் அமைந்துள்ளதாகவும் கூறப்பட்டது.

