டெங்கியால் பாதிக்கப்படுவோருக்குச் சிகிச்சை அளிக்கும் நோக்கில், ஆய்வாளர்கள் முதன்முறையாக ஒரு மருந்தை, சோதனைக் கட்டத்தில் ஆராய்ந்து வருகின்றனர்.
இச்சோதனைக் கட்டத்தை வெற்றிகரமாகக் கடந்துவிட்டால் டெங்கிக்கு ஒரு முடிவுகட்டலாம் என்று கூறப்படுகிறது.
சிங்ஹெல்த் மருத்துவ ஆராய்ச்சிப் பிரிவு இம்முன்னோட்டத் திட்டத்தைச் சோதித்து வருகிறது. தற்போது டெங்கியைக் குணப்படுத்தும் மருந்து ஏதும் இல்லை என்று இதன் துணை மருத்துவ, அறிவியல் இயக்குநர் பேராசிரியர் ஜென்னி லோ கூறினார்.
நோயாளிகளுக்கு ஆதரவு அளிப்பது, டெங்கி அறிகுறிகளான காய்ச்சல் மற்றம் வலியைப் போக்குவதில்தான் தற்போது சிகிச்சை முறை கவனம் செலுத்துகிறது.
டெங்கி கிருமியில் உள்ள இருவகை புரதங்கள் கலப்பதைப் புதிய ஆய்வு மருந்து தடுக்கிறது.
கிருமி இக்குறிப்பிட்ட இரு புரதங்களாலும் இனப்பெருக்கம் செய்வதாக பேராசிரியர் லோ குறிப்பிட்டார்.
"தொற்றால் பாதிக்கப்பட்ட கொசு மூலம் நம் ரத்தத்தில் டெங்கி ஊடுருவும்போது, நமது நோய் எதிர்ப்பு உயிரணுக்களை அது தாக்குவதுடன் இனப்பெருக்கமும் செய்யும். அதைத் தடுக்கவும் மேலும் பல உயிரணுக்கள் தாக்கப்படாமல் இருக்கவும், வெவ்வேறு உடல் உறுப்புகளுக்குச் சேதம் ஏற்பட்டுக் கடுமையான டெங்கி தொற்று சிக்கல் ஏற்படாமல் இருக்கவும் இப்புதிய மருந்து உதவும் என்று நம்புகிறேன்," என்றார் அவர்.
டெங்கியால் பாதிக்கப்பட்ட ஆரம்பக்கட்டத்தில் திரவ வடிவில் ஐந்து நாள்களுக்கு மருந்து தரப்படும்.

