தனிநபர் தகவல் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் உறுப்பினர்களின் தனிநபர் தரவுகளைப் பாதுகாக்கத் தவறியதற்காகவும் வேறு சில விதிமீறல்களுக்காகவும் 'நேச்சர் சொசைட்டி' எனும் இயற்கை ஆர்வலர் குழுவுக்கு $14,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தரவுத் தனியுரிமைச் சட்டங்களுக்கு உட்படுவதற்குத் தேவையான எழுத்துபூர்வ கொள்கைகள் குழுவிடம் இல்லை என்றும் தரவுப் பாதுகாப்பு அதிகாரி ஒருவரை குழு நியமிக்கவில்லை என்றும் தனிநபர் தகவல் பாதுகாப்பு ஆணையம் கடந்த வாரம் தெரிவித்திருந்தது.
'நேச்சர் சொசைட்டி' இணையத்தளத்தில் உறுப்பினர், பயனாளர் கணக்குகளை வைத்திருந்த 5,131 உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர் அல்லாதவர்களின் விவரங்கள், 2020ஆம் ஆண்டு நவம்பர் 6ஆம் தேதியன்று கண்டறியப்பட்ட சம்பவம் ஒன்றில் பாதிக்கப்பட்டதாகத் தெரியவந்தது.
ஊடுருவப்பட்ட தரவுத்தளங்களைப் பதிவிறக்கம் செய்யலாம் என்று பல ஊடுருவி இணையத்தளங்களில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டதில், பாதிக்கப்பட்ட அமைப்புகளில் இந்த இயற்கை ஆர்வலர் குழுவின் பெயரும் இடம்பெற்றிருந்தது.
பெயர், கடவுச்சொல், மின்னஞ்சல் முகவரி, தொடர்பு எண், பிறந்த தேதி போன்ற தகவல்களை ஊடுருவப்பட்ட தரவுத்தளங்கள் கொண்டிருந்தன. தரவுப் பாதுகாப்புக் கொள்கையை நடைமுறைப்படுத்தத் தவறியதாகக் குழு ஒப்புக்கொண்டது.

