கி. ஜனார்த்தனன்
சக்தி மேகனா
ஆ. விஷ்ணு வர்தினி
நண்பர்களான திரு கலைச்செல்வன் மணிராம், திரு சாமிநாதன் வெற்றிவேல், திரு பாலசுப்பிரமணியம் விக்னேஷ் ஆகிய மூவரும் அருள்மிகு தெண்டாயுதபாணி கோவிலுக்கு நேற்று ஒன்றாக வந்திருந்து, பால்குடம் எடுத்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.
கொவிட்-19 பரவலுக்குப்பின் வெளிநாட்டு ஊழியர்களான அம்மூவரும் ஈராண்டுகளுக்குப் பிறகு நேற்றுதான் ஒன்றாக வெளியில் வர முடிந்தது.
"நீண்டகாலத்திற்குப்பின் ஒன்றாய்ச் சேர்ந்து வந்திருப்பது புதுமையான உணர்வாக உள்ளது. இதனால் மகிழ்ச்சியும் நிம்மதியும் அடைந்துள்ளோம்," என்று வாகன ஓட்டுநர்களாகப் பணிபுரியும் அவர்கள் கூறினர்.
சென்ற ஆண்டைப் போலவே இம்முறையும் காவடி எடுக்க அனுமதி இல்லை. பால்குடத்திற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. 7,000க்கும் மேற்பட்டோர் பால்குடம் எடுத்து, வேண்டுதல்களை நிறைவேற்றினர்.
நன்கு திட்டமிட்டு, ஏற்பாடுகள் சிறப்பாகச் செய்யப்பட்டிருந்ததால் பக்தர்கள் அதிக நேரம் காத்திருக்கத் தேவையின்றி, விரைவாகவே வேண்டுதலை முடித்து, இறைவனை தரிசித்துச் சென்றனர்.
"மூன்றாண்டுகளாக தைப்பூசத் திருவிழாவில் கலந்துகொள்கிறேன். இம்முறை கோவில் சற்று அமைதியாகத்தான் உள்ளது," என்றார் உணவு விடுதி மேலாளரான திரு தங்கராஜ்.
நடைப்பயணமாக வந்த சிலர்
காவடிகள் இல்லாததுடன் சிராங்கூன் ரோடு ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவிலில் இருந்து ஊர்வலமாக தேங் ரோடு அருள்மிகு தெண்டாயுதபாணி கோவிலுக்கு வர முடியாததும் பக்தர்கள் சிலருக்கு வருத்தமளித்தது.
ஆனாலும், சிலர் அப்படி நடைப்பயணமாக தேங் ரோடு கோவிலுக்கு வந்திருந்தனர்.
"இவ்வாண்டு என் மனைவி முதன்முறையாக வடபத்திர காளியம்மன் கோவிலில் இருந்து நடந்து வந்துள்ளார். இரண்டாம் கட்டப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் கடந்த வாரம்தான் முடியிறக்கினார்," என்றார் தளவாடத் துறையில் பணியாற்றும் திரு அசோக் குமார்.
ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவிலில் இருந்து நடந்து வந்த திரு பிரகதீஸ்வரன், வழக்கமான தைப்பூசக் களை இல்லாதபோதும் கடந்த ஆண்டைக் காட்டிலும் இம்முறை அதிகமான பக்தர்கள் வந்திருப்பதாகக் குறிப்பிட்டார்.
தங்கள் குடும்பத்தில் தைப்பூசத் திருநாளை மிக முக்கியமான விழாவாகக் கருதும் திருவாட்டி லக்ஷ்மி, 39, கடந்த 14 ஆண்டுகளாகக் குடும்பத்துடன் பால்குடம் எடுத்து வருவதாகச் சொன்னார்.
சிறப்பான திட்டமிடல் காரணமாக இம்முறை காத்திருப்பு நேரம் குறைந்து, மிக எளிதாகவும் அதே நேரத்தில் வசதியாகவும் இறைவனை வேண்டிக்கொள்ள முடிந்ததாகக் கூறினார் அவர்.
அடுத்த ஆண்டிற்குள் கிருமிப் பரவல் முற்றாக ஒழிந்து, முகக்கவசம் அணியத் தேவையில்லா நிலை ஏற்பட்டு, மீண்டும் காவடிகளைப் பார்க்க வேண்டும், அவற்றைப் பிள்ளைகளுக்குக் காட்ட வேண்டும் என்று முருகப்பெருமானிடம் வேண்டிக்கொண்டாதாகக் கூறினார் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைககழகத்தில் நூலகராகப் பணிபுரியும் திருவாட்டி லக்ஷ்மி.
மரபை அறிய மகத்தான வாய்ப்பு
நமது பாரம்பரியத்தைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள தைப்பூசக் கொண்டாட்டம் நல்ல தளமாகவும் வாய்ப்பாகவும் விளங்குவதாகக் குறிப்பிட்டார் இளையரான சக்திவேலு ஜனனி சுருதி, 16.
"வெளிநாடுகளில் மிகக் கோலாகலமாக நடைபெறும் தைப்பூசக் கொண்டாட்டங்களுக்கு இணையாக நாமும் இங்கே கொண்டாடுகிறோம் என்பதைக் காணும்போது வியப்படைந்தோம். பலரும் இந்த நாளுக்கென்றே குறிப்பாக விடுப்பு எடுத்துக்கொண்டு வருவது பாராட்டத்தக்கது," என்றார் அவர்.
முந்திய ஆண்டுகளைக் காட்டிலும் இம்முறை இறைதரிசனம் விரைவாக முடிந்துவிட்டதாகக் குறிப்பிட்டார், இவ்வாண்டு தொடக்கக் கல்லூரியில் சேரும் திட்டத்தில் இருக்கும் சகானா ராமமூர்த்தி, 17.
தம்மைப் போன்ற அடுத்த தலைமுறையினர், தைப்பூசம் போன்ற பண்பாட்டு விழாக்களில் கலந்துகொள்வது முக்கியமெனத் தாம் கருதுவதாகவும் அவர் சொன்னார்.
சிறுவயதிலிருந்தே கோவிலுக்கு வந்து தைப்பூசத்தைக் கொண்டாடுவது தமது குடும்ப வழக்கம் என்றார் தற்போது 'ஏ' நிலைத் தேர்வு முடிவுகளுக்காகக் காத்திருக்கும் காவியா, 18.
"இவ்வாண்டு ஊர்வலமாக வரும் வாய்ப்பு கிட்டவில்லை. என்றாலும், சிங்கப்பூர் முருகன் கோவில்களில் நடக்கும் தைப்பூச வழிபாடுகளைக் குடும்பமாகச் சென்று காணவேண்டும் என்று திட்டமிட்டுள்ளோம்," என்ற அவர், அடுத்ததாக செங்காங் அருள்மிகு வேல்முருகன் ஞானமுனீஸ்வரர் கோவிலுக்குச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்தார்.
கடந்த பத்து ஆண்டுகளாக தைப்பூசத் திருநாளன்று நடைபெறும் கொண்டாட்டங்களைப் புகைப்படம் எடுத்து வருகின்றார் தன்னார்வப் புகைப்படக் கலைஞரான திரு கேசி எங், 35.
இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் தைப்பூசக் கொண்டாட்டங்களைப் படமெடுத்த அனுபவம் கொண்டவர் அவர்.
"முருகப்பெருமானைப் போலவே எங்கள் சீனப் பண்பாட்டிலும் ஒரு காவல் தெய்வம் உள்ளது. அந்த வகையில், இரு பண்பாடுகளுக்கு இடையே உள்ள சில ஒற்றுமைகளைக் கண்டறிவது சுவாரசியமாக உள்ளது. இவ்வாண்டு தைப்பூச விழா அமைதியாகக் காட்சியளிக்கிறது. அடுத்த ஆண்டு காவடி எடுக்க அனுமதிக்கப்படும் என்று நம்புகிறேன்," என்றார் திரு எங்.
'பால்காவடி எடுக்கவாவது அனுமதி வழங்கியிருக்கலாம்'
அலகுக் காவடி, ஊர்வலம் போன்றவை இல்லாதது பலருக்கும் வருத்தத்தை அளித்தாலும் பால் காவடிகளுக்கேனும் அனுமதி வழங்கப்பட்டிருக்கலாம் என்றார் தகவல் தொழில்நுட்ப வல்லுநரான திரு மதன், 43.
நேற்று ஒருநாள் விடுப்பு எடுத்து, நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் சேர்ந்து, கோவிலில் தொண்டூழியம் புரிந்தார் நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரியில் பயிலும் நாச்சா, 17.
"தொண்டூழிய ஆர்வத்தை என் பெற்றோரே என்னுள் விதைத்தனர்," என்ற அவர், இது மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது என்றும் குறிப்பிட்டார்.

