$3 மி. அள்ளிக்கொடுத்து அரவணைப்பு
இரண்டு வயது தேவ்தன் தேவராஜ் ஒருவகையான நரம்புத்தசை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை. மிகவும் பலவீனமடைந்து முடங்கிப்போன அந்தக் குழந்தை, சிகிச்சைக்குப் பின்னர் ஒருவரின் துணையுடன் நிற்கிறது, நடக்கிறது. 'உலகின் ஆக விலை உயர்ந்த மருந்து' மூலம் அளிக்கப்பட்ட சிகிச்சைக்குத் தேவையான பணத்திற்காக நிதி திரட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஏறக்குறைய $3 மில்லியன் நன்கொடை திரண்டது.
குழந்தையின் தாயார் திருவாட்டி ஷு வென் தேவராஜ் கட்டட உள்வடிவமைப்பாளர். அவரது கணவர் அரசாங்க ஊழியர். இருவரின் வயதும் 33. இவர்
களின் ஒரே குழந்தை தேவ்தன்.
ஒரு மாதக் குழந்தையாக இருந்தபோது தேவ்தனுக்குத் தண்டுவட தசைச் சிதைவு ஏற்பட்டது. இதனால் அந்தக் குழந்தையின் தசை பலவீனமடைந்து நாளுக்கு நாள் மோசமடைந்தது. இதற்குச் சிகிச்சை அளிக்காவிட்டால் பதின்ம வயதில் ஒட்டுமொத்த நடமாட்ட சக்தியையும் தேவ்தன் இழக்கக்கூடும் என்று கூறப்பட்டது.
"ஓராண்டுக்கு முன்னர், எங்கள் குழந்தை நடக்குமா என்பதை என்னாலும் என் கணவராலும் கற்பனை செய்துகூட பார்க்க இயலாத அளவுக்கு நிலைமை இருந்தது. குழந்தையால் நிற்கவும் முடியவில்லை.
"ஆனால் இப்போது ஆள் அல்லது பொருள் துணையுடன் அவன் நடப்பதையும் முச்சக்கர சைக்கிள் ஓட்டுவதையும் நாங்கள் காண்கிறோம். இது ஓர் அதிசய நிகழ்வு," என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் திருவாட்டி ஷு கூறினார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பத்து நாட்களில் சுமார் 30,000 பேர் நன்கொடை அளித்ததன் மூலம் $2.87 மில்லியன் நிதி திரண்டது. தேவ்தனின் சிகிச்சைக்கு ஆகும் செலவுக்காக இந்த நிதித் திரட்டை 'ரே ஆஃப் ஹோப்' என்னும் அறநிறுவனம் நடத்தியது.
தங்களது தளத்தில் ஒரே ஒருவருக்காக திரட்டப்பட்ட ஆக அதிகத் தொகை இது என்று அறநிறுவனத்தின் பொது மேலாளர் திரு டான் என் கூறினார்.
கடந்த ஆண்டு இந்நிறுவனம் தனது நிதித் திரட்டுத் தளம் மூலம் திரட்டிய மொத்த தொகையான $4.4 மில்லியனில் மூன்றில் இரு பங்கு இந்தக் குழந்தைக்கான நன்கொடை நிதி.

