முஹமது அலி முஹமது பேசாலுக்கு தகவல் தொழில்நுட்பத் துறையில் ஆர்வமில்லை. இதனால் 17 வயது இளையரான அவர் கடந்த ஆண்டு இறுதியில் தொழில்நுட்பக் கல்விக் கழக படிப்பை நிறுத்தினார்.
ஆனால் வனவிலங்கு மற்றும் கடல்வாழ் உயிரினங்களுடன் இருக்கும் தனது கனவு வேலைக்கு அவர் மாறியுள்ளார். இதற்கு, சமுதாய குடும்ப மேம்பாட்டு அமைச்சு தொடங்கிய முன்னோடி வழிகாட்டித் திட்டம் கைகொடுத்துள்ளது.
"இது ஒரு முக்கிய வாய்ப்பு. எதிர்காலத்தில் இப்படித்தான் இருக்க விரும்புகிறேன்," என்று விலங்கியல் தோட்டத்தில் விலங்கு பராமரிப்பு உதவியாளராக இருக்கும் முஹமது அலி தெரிவித்தார்.
இரண்டு ஆண்டுகாலத்திற்கு நீடிக்கும் வாழ்க்கைத் தொழில் ஆலோசனை மற்றும் வழிகாட்டி முகாமில் பங்கேற்கும் 100 இளையர்களில் இவரும் ஒருவர்.
கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதத்தின்போது ஐடிஐ கல்வியை பாதியில் கைவிடும் மாணவர்களுக்காக இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டது.
மாணவர்கள் தங்களுடைய விருப்பத்தைத் தேர்வு செய்து வாழ்க்கைத் தொழிலாக அமைத்துக்கொள்ள தொழில் துறை வழிகாட்டிகளின் கீழ் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பைப் பெறுகின்றனர்.
கிளார்க் கீயில் நேற்று இந்த முன்னோடித் திட்டத்தை தொடங்கி வைத்துப் பேசிய சமுதாய குடும்ப மேம்பாட்டு அமைச்சின் நாடாளுமன்றச் செயலாளரான எரிக் சுவா, ஒவ்வொரு இளையரும் எத்தகைய பின்னணி, சூழலைக் கொண்டிந்தாலும் தகுந்த வழியைக் காட்டினால் அவர்களாலும் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என்று தெரி வித்தார்.

