தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் (ஐடிஇ) துவங்கி வைக்கப்பட்டுள்ள புதிய திட்டத்தின்கீழ், செயற்கை நுண்ணறிவு சார்ந்த திறன் மேம்பாட்டில் 2,000 மாணவர்கள் ஈடுபடுவர்.
சிங்கப்பூரில் செயற்கை நுண்ணறிவு பரவலாக நாடப்படும் என்பதால் ஊழியர் அணியில் ஏற்படக்கூடிய இடைவெளிகளைச் சமாளிக்க இந்தப் புதிய திட்டம் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
'ஐடிஇ', 'நிவிடியா' எனும் அனைத்துலக தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையே நேற்று செய்துகொள்ளப்பட்ட பங்காளித்துவ ஒப்பந்தத்தின்படி, செயற்கை நுண்ணறிவு அமைப்புமுறையைச் செயல்படுத்தத் தேவையான பயிற்சியை ஏப்ரல் மாதத்தில் கிட்டத்தட்ட 400 ஐடிஇ மாணவர்கள் பெறத் தொடங்குவர்.
செயற்கை நுண்ணறிவு அமைப்புமுறைகளை நடைமுறைப்படுத்தும் தொழில்துறை அனுபவத்தை இம்மாணவர்கள் பெறுவர் என்று நேற்றைய ஒப்பந்த நிகழ்வில் கலந்துகொண்ட கல்வி அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்தார்.
செயற்கை நுண்ணறிவைக் கொண்டு சிங்கப்பூர் அதன் பொருளியலை 2030ஆம் ஆண்டுக்குள் உருமாற்றத் திட்டமிட்டுள்ளதற்கு இப்புதிய முயற்சி உதவும் என்றார் அவர்.
அடுத்த மூன்று ஆண்டுகளில் ஏறத்தாழ 2,000 மாணவர்கள் இப்புதிய திட்டம் வழி பலனடைவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பல்கலைக்கழக பட்டதாரிகளால் மட்டுமே சிங்கப்பூரின் தேசிய செயற்கை நுண்ணறிவு உத்திமுறையை நிறைவேற்ற முடியாது என்று குறிப்பிட்ட திரு சான், பலதரப்பட்ட திறன் தொகுப்புகளும் வேலைப் பொறுப்புகளும் தேவை என்றார்.
ஒப்பந்தப்படி, ஐடிஇ அதன் முதல் செயற்கை நுண்ணறிவுப் பயிற்சி வளாகத்தைத் தொடங்க உள்ளதாகக் கூறப்பட்டது. முதல் காலாண்டிற்குள் 'நிவிடியா'வின் அதிநவீன கணினித் தளத்தைக் கொண்டு வளாகம் செயல்படும்.
சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் கலிஃபோர்னியாவில் நிறுவப்பட்ட 'நிவிடியா', அனைத்துலக விளையாட்டு ஆர்வலர்கள் பயன்படுத்தும் வரைகலை அட்டைகளுக்குப் பெயர் போனது.

