பிப்ரவரி 1 முதல் தடுப்பூசி அடிப்படையிலான பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகள் விரிவாக்கம்
அடுத்த மாதத்தில் இருந்து தடுப்பூசி அடிப்படையிலான பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகள் விரிவுபடுத்தப்படவுள்ளன.
இந்த நிலையில், இன்னும் கொவிட்-19 தடுப்பூசி போடாத வழிபாட்டாளர்களுக்கு அவற்றில் இருந்து சலுகைகள் அளிக்கும்படி குறைந்தது இரண்டு வழிபாட்டுத் தலங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.
வரும் பிப்ரவரி 1ஆம் தேதியில் இருந்து, எல்லா நிகழ்ச்சிகளிலும், எத்தனை பேர் கலந்துகொண்டாலும், தடுப்பூசி அடிப்படையிலான பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகள் அமல்படுத்தப்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இப்போது 50 பேருக்குக் குறைவானோர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் அவற்றைப் பின்பற்றத் தேவையில்லை.
அதாவது, முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டோர், மருத்துவக் காரணங்களுக்காக தடுப்பூசி போடத் தகுதிபெறாதோர் அல்லது கொவிட்-19 தொற்றிலிருந்து மீண்டோரும் 12 வயது மற்றும் அதற்குக் கீழுள்ளோரும் மட்டுமே ஒன்றுகூடல், வழிபாட்டுச் சேவைகள் போன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க இயலும்.
அத்துடன், உயர்கல்வி நிலையங்கள் போன்ற இடங்களும் பிப்ரவரி 1 முதல் தடுப்பூசி அடிப்படையிலான பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகளின்கீழ் வரும். இதனால், பகுதிநேர மாணவர்களும் வருகையாளர்களும் பாதிக்கப்படலாம்.
இந்நிலையில், தடுப்பூசி போட்டிருந்தாலும் போடாவிடினும் திருச்சபையினர் அனைவருக்கும் வழிபட உரிமை உள்ளது என்ற தங்களது நிலைப்பாட்டை ஸியோன் சாலையில் உள்ள செயின்ட் பெர்னடெட் தேவாலயத்தின் பேராயரும் பேராய கொவிட்-19 பணிக்குழுவும் அதிகாரிகளிடம் தெரிவித்து வருகின்றனர் என்று அத்தேவாலயம் கடந்த ஞாயிறன்று வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவு தெரிவித்தது.
தடுப்பூசி போடாதோருக்கென தொடர்ந்து தனியாக வழிபாடு நடத்த சலுகை அளிக்கும்படி பேராயம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அப்பதிவு கூறியது.
இதனிடையே, தடுப்பூசி போடாதோர் தொடர்ந்து வழிபாட்டு நடவடிக்கைகளில் கலந்துகொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக சிங்கப்பூர் தேசிய தேவாலயங்கள் மன்றத்தின் தலைமைச் செயலாளர் டாக்டர் இங்கோய் ஃபூங் இங்கியன் கூறினார்.
இந்நிலையில், கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சிற்கும் சமய அமைப்புகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை தொடர்கிறது என்று அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்து அறக்கட்டளை வாரியத்தின் நான்கு கோவில்களில் குறிப்பிட்ட நாள்களில் மட்டுமே தடுப்பூசி போடாதோர் அனுமதிக்கப்படுகின்றனர்.
அதுபோல, தடுப்பூசி போட்டுக்கொண்டோர், தொற்றிலிருந்து மீண்டோர், தடுப்பூசி போடத் தகுதிபெறாதோர், 12 அல்லது அதற்கும் குறைந்த வயதுடைய குழந்தைகள் மட்டுமே ஐம்பது பேருக்குமேல் கலந்துகொள்ளும் தொழுகைகளில் அனுமதிக்கப்படுகின்றனர் என்று சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் (முயிஸ்) தெரிவித்தது.
தடுப்பூசி அடிப்படையிலான பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகளை எதிர்த்து முறையிடப்போவது இல்லை என்று சிங்கப்பூர் பௌத்த கூட்டமைப்பின் தலைவர் செக் குவாங் ஃபிங் தெரிவித்தார்.
சீக்கியக் கோவில்கள் தடுப்பூசி போடாதோரை இப்போதே அனுமதிப்பதில்லை.