சிங்கப்பூரில் சமூகத்தில் கொவிட்-19 பரவல் அதிகரிக்கத் தொடங்கியதை அடுத்து, நோய்ப் பரவல் முறியடிப்புத் திட்டத்தை அறிவிப்பது தொடர்பில் கடந்த 2020 ஏப்ரல் 1ஆம் தேதி அமைச்சரவை கூடி, விவாதித்தது.
அப்போதே அதனை அறிவிக்கலாமா அல்லது இன்னும் சிறிது காலம் காத்திருக்கலாமா என்பது குறித்து வெவ்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
கொரோனா தொற்றுக்கு எதிரான சிங்கப்பூரின் போராட்டத்தை விரிவாக நினைவுகூரும் புதிய நூலுக்கு அளித்த நேர்காணலில் பிரதமர் லீ சியன் லூங் இதனைப் பகிர்ந்துகொண்டார்.
"மோசமான திசையை நோக்கிச் செல்கிறோம், உடனடியாகச் செயல்பட வேண்டியது முக்கியம் என்பதைப் பாதிப்பு எண்ணிக்கை காட்டியது. அதனால் காத்திருப்பதில் அர்த்தமில்லை. அது மிகப் பெரிய முடிவு. நான் அதிகப்படியான நடவடிக்கைகளை எடுப்பேனே தவிர, குறைவான நடவடிக்கைகளை எடுக்கமாட்டேன்," என்று பிரதமர் லீ சொன்னார்.
கொவிட்-19 பரவல் முறியடிப்புத் திட்டத்தைச் செயல்படுத்துவது என்று முடிவெடுக்கப்பட்டபின், முதலில் அது நான்கு வாரங்களுக்கே அறிவிக்கப்பட்டது.
"ஆனால், பெரும்பாலும் அதனை நீட்டிக்க வேண்டியிருக்கும் என்பதை நாங்கள் அறிந்திருந்தோம்," என்று திரு லீ அந்நூலில் குறிப்பிட்டுள்ளார்.
இறுதியில், 2020 ஏப்ரல் 7ஆம் தேதியில் இருந்து ஜூன் 1ஆம் தேதிவரை நோய்ப் பரவல் முறியடிப்புத் திட்டம் நடப்பில் இருந்தது.
'இன் திஸ் டுகெதர்: சிங்கப்பூர்'ஸ் கொவிட்-19 ஸ்டோரி' எனும் தலைப்பில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பிரஸ் அந்நூலை வெளியிட்டுள்ளது.
அதில், 300க்கும் மேற்பட்டோரை நேர்காணல் கண்ட ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர்களின் கட்டுரைகளும் 2020 ஜனவரி 23ஆம் தேதி சிங்கப்பூரில் கிருமி பாதிப்பு முதன்முதலாகக் கண்டறியப்பட்டதில் இருந்து நாடு எதிர்கொண்ட இக்கட்டான தருணங்களும் தொகுக்கப்பட்டுள்ளன.
அந்நூலில், கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளை விவரித்துள்ள பிரதமர் லீ, கொரோனா தொற்றை 'நமது தலைமுறையின் நெருக்கடி' என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தொடக்கத்தில் கிருமித்தொற்று அறிகுறிகள் இருப்போர் மட்டுமே முகக்கவசம் அணிந்தால் போதும் என்று அறிவித்த அரசாங்கம், பின்னர் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று தனது நிலையை மாற்றிக்கொண்டதற்கான காரணங்களையும் பின்னணியையும் விளக்கியுள்ளார்.
நெருக்கடியின்போது பதற்றமின்றி, அமைதியாக இருந்து 'ஏற்ற இறக்கங்களை' எதிர்கொள்வதே தமது முதன்மையான வழி என்று திரு லீ பகிர்ந்துகொண்டுள்ளார்.
தியானம், உடற்பயிற்சி செய்யத் தொடங்கிவிட்டதாகவும் வார இறுதிகளில் நடைப்பயிற்சி செல்வதாகவும் எண்ணவோட்டத்தைத் திசைதிருப்ப புகைப்படம் எடுப்பதாகவும் அவர் சொன்னார்.
கொவிட்-19 பரவல் அனைத்து சிங்கப்பூரர்களுக்கும் ஒரு கடுமையான சோதனை என்று நூலின் அணிந்துரையில் குறிப்பிட்டுள்ள பிரதமர் லீ, இக்காலகட்டத்தில் இளையர்கள் தங்களது துணிச்சலையும் மனவுறுதியையும் வெளிப்படுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.