சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகம் அடுத்த ஆண்டுக்குள் கூடுதலாக 6.7 விழுக்காடு மாணவர்களைச் சேர்த்துக்கொள்ளவிருப்பதாக அதன் தலைவர் பேராசிரியர் சுவா கீ சாய்ங் தெரிவித்துள்ளார். இதன்படி அடுத்த ஆண்டுக்குள் தொழில்நுட்பக் கழகம் 3,200 மாணவர்களைச் சேர்த்துக்கொள்ளும்.
மூன்றாவது முறையாக நடைபெறும் செயல்முறை கற்றல் திட்ட மாநாட்டின் தொடக்க உரையை ஆற்றிய அவர், தொழில்நுட்பக் கழகத்தில் சென்ற ஆண்டு சுமார் 3,000 இடங்களுக்கு மொத்தம் 13,000 விண்ணப்பங்கள் வந்ததாகக் கூறினார்.
இவ்வாண்டுக்கான மாநாடு மெய்நிகராக நடைபெறுகிறது. 2020ஆம் ஆண்டு சிங்கப்பூரில் உள்ள ஆறு பல்கலைக்கழகங்கள் மொத்தமாக 17,500 மாணவர்களைச் சேர்த்துக்கொண்டதாகவும் சென்ற ஆண்டு இந்த எண்ணிக்கை 17,800ஆகக் கூடியதாகவும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.
"எங்கள் பல்கலைக்கழகம், செயல்முறை கற்றலை நடைமுறைப்படுத்தும் சிங்கப்பூரின் முதல் பல்கலைக்கழகமாக இருப்பதுடன், புதிய பல்கலையாக இருந்தாலும் ஆக அதிகமான மாணவர்களைச் சேர்த்துக்கொள்வதில் மூன்றாவது இடத்தை இப்போதே அடைந்துவிட்டது," என்று பேராசிரியர் சுவா சுட்டினார். மேலும், இந்தப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த மாணவர்களில் 90 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் தங்களுக்கு மிகவும் விருப்பமான முதல் இரண்டு பாடத் திட்டங்களில் ஒன்றைத் தேர்வுசெய்ய முடிந்ததை அவர் குறிப்பிட்டார்.
தொழில்துறைகளுடன் சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகம் இணைந்து செயல்படுவதன் முக்கியத்துவத்தையும் பேராசிரியர் சுவா சுட்டினார்.
இது, தனது பல்கலைக்கழகத்தின் 'ஐடபிள்யூஎஸ்பி' எனும் ஒருங்கிணைந்த வேலை, கல்வித் திட்டத்திற்குக் கைகொடுக்கிறது. வேலை அனுபவம், பாடங்கள் இரண்டின் வாயிலாகவும் மாணவர்களின் கற்றலுக்கு உதவும் இத்திட்டம், தொழில்நுட்பக் கழகத்தின் குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்று.
சீமென்ஸ் நிறுவனத்துடன் இணக்கக் குறிப்பு ஒன்றிலும் தொழில்நுட்பக் கழகம் கையெழுத்திட்டது. எந்திரவியல் முறைகளில் வல்லமை பெறுவதற்கான பட்டக் கல்வித் திட்டத்தைத் தொடங்க இந்த இணக்கக் குறிப்பு கையெழுத்தானது.
எந்திரவியல் முறைகளை உருவாக்குவது, செயற்கை நுண்ணறிவு போன்றவற்றில் மாணவர்களின் திறன்களை வளர்க்க இந்தப் பாடத் திட்டம் வகைசெய்யும் என்று பேராசிரியர் சுவா சொன்னார்.
கூடுதலான மாணவர்களைச் சேர்த்துக்கொள்ளும் சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகம்