கையடக்கக் கருவியில் உள்ள ஒரே தளத்தின் மூலம் பல எந்திர காவல்துறை அதிகாரிகளைச் செயல்படுத்துவது விரைவில் சாத்தியமாகலாம். அவ்வாறு நேர்ந்தால் ஒருவர் விடுக்கும் உத்தரவின்படி அனைத்து எந்திரங்களும் செயல்படும்.'மட்டார்' எனும் பல சூழல்களில் இயங்கும் தானியக்க எந்திரங்கள், 'ரோவர்-எக்ஸ் ரோபோட்டிக் டாக்' எனும் எந்திர நாய் ஆகியவை இந்த ஏற்பாட்டில் அடங்கும்.
'ஹெச்டிஎக்ஸ்' எனும் உள்துறை அமைச்சின் அறிவியல், தொழில்நுட்ப அமைப்பு, 'என்சிஎஸ்' தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து இந்த எந்திரங்களுக்கான செயல்பாட்டுத் தளத்தை உருவாக்கியுள்ளது. உள்துறை அமைச்சின் அனைத்து எந்திரங்களையும் ஒரே தளத்திலிருந்து இயக்க வகைசெய்வது இந்த முயற்சியின் இலக்கு.
தற்போது இந்தத் தளத்தை சிங்கப்பூர் காவல்துறை, தோ பாயோ போக்குவரத்து மையத்தில் சோதனையிட்டு வருகிறது. இதைப் பயன்படுத்தி இங்கு பல 'மட்டார்' எந்திரங்களைக் காவல்துறையினர் இயக்குகின்றனர். கூட்டத்தைக் கலைப்பது போன்றவற்றுக்காக மாதிரி சூழல்களை அதிகாரிகள் உருவாக்கி சோதனையிட்டு வருகின்றனர். சிங்கப்பூர் காவல்துறையின் வருங்காலச் செயல்பாடுகள், திட்டமிடுதல் பிரிவின் காவல்துறை துணை கண்காணிப்பாளர் லிம் ஜிம் காய் இந்த முயற்சியைப் பாராட்டினார்.
"பல 'மட்டார்' எந்திரங்களை இயக்குவதோடு சட்ட ஒழுங்கைக் கடைப்பிடிக்க பல்வேறு இடங்களில் அவற்றைச் செயல்படுத்த இந்தத் தளம் கூடுதல் உதவியாக இருக்கும்," என்று அவர் குறிப்பிட்டார்.