நிதிச் சேவை நிறுவனத்திற்கு
1.1 மில்லியன் வெள்ளி அபராதம்
நிதிச் சேவை நிறுவனமான விஸ்டா டிரஸ்ட்டுக்கு சிங்கப்பூர் நாணய ஆணையம் 1.1 ஒரு மில்லியன் வெள்ளி அபராதம் விதித்துள்ளது. கள்ளப் பணத்தை நல்ல பணமாக்குவது, பயங்கரவாதச் செயல்களுக்கு நிதியுதவி வழங்குவது ஆகியவற்றின் தொடர்பில் விதிமுறைகளைப் பின்பற்றாததற்காக விஸ்டா டிரஸ்ட் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அந்நிறுவனம் பல விதிமுறைகளைப் பெரிய அளவில் மீறியது 2019ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை நாணய ஆணையம் நடத்திய சோதனையில் தெரிய வந்தது. அதனால் சட்டவிரோத நடவடிக்கைகளுக்குத் தவறாகத் துணைபோகக்கூடிய அபாயம் அதிகம் உள்ள நிறுவனமாக விஸ்டா டிரஸ்ட்டை ஆணையம் வகைப்படுத்தியது. அறக்கட்டளைகளை உருவாக்கி அவை சார்ந்த சேவைகளை வழிங்குவது போன்றவை விஸ்டா டிரஸ்ட்டின் வர்த்தக நடவடிக்கைகளில் அடங்கும்.
கள்ளப் பணத்தை நல்ல பணமாக்குவதைத் தடுக்க விதிமுறைகளைப் பின்பற்றாத நிதி அமைப்புகளின் மீது நாணய ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று அதன் கொள்கை, கட்டணம், நிதிக் குற்றப் பிரிவின் துணை நிர்வாக இயக்குநர் திருவாட்டி லூ சியூ யீ எச்சரித்தார்.
பாலியல் குற்றங்களை எதிர்நோக்கும் சமயக் குழு உறுப்பினர்
கத்தோலிக்க சமயக் குழுவின் உறுப்பினரான ஒருவர் குறைந்தது இரண்டு பதின்ம வயது ஆண்களிடம் பாலியல் ரீதியாகத் தகாத முறையில் நடந்துகொண்டதாக சந்தேகிக்கப்படுகிறது. அவர் ஒரு பாதிரியார் அல்ல என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது.
இயற்கைக்கு மாறான முறையில் வேண்டுமென்றே பாலியல் உறவு வைத்துக்கொண்டதாக சிங்கப்பூரரான சந்தேக நபர் மீது இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. சிறுவர், இளம் வயதினர் சட்டத்தின்கீழ் இரண்டு இளம் ஆண்களிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாகவும் அவர் மீது மேலும் இரு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. தடை உத்தரவு இருப்பதால் சந்தேகத்திற்குரிய ஆடவரினதும் பாதிக்கப்பட்டவர்களினதும் அடையாளங்கள் வெளியிடப்படவில்லை.
2005லிருந்து 2007ஆண்டு வரை குறைந்தது நான்கு முறை பல்வேறு இளம் ஆண்களிடம் அவர் தவறாக நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
சந்தேகத்திற்குரிய ஆடவரின் மனநலனைக் கண்காணிக்க சாங்கி சிறைச்சாலை வளாகத்தின் மருத்துவ நிலையத்தில் அவரைத் தடுப்புக் காவலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கு விசாரணை அடுத்த மாதம் 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
திருமணச் சொத்து விவகாரம்: ஆடவரைக் கண்டித்த நீதிமன்றம்
தனது முன்னாள் மனைவிக்குச் சேரவேண்டிய திருமணச் சொத்தின் பங்கைக் குறைக்க முயன்ற ஒரு மருத்துவர் அந்த முயற்சியில் தோல்வியடைந்துள்ளார்.
13 மில்லியன் வெள்ளி மதிப்புகொண்ட திருமணச் சொத்தில் அந்த ஆடவருக்குச் சேரவேண்டிய பங்கை 2020ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் 75 விழுக்காட்டுக்கு உயர்த்தியது. அதைத் தொடர்ந்து தனது முன்னாள் மனைவிக்குச் சேரவேண்டிய பங்கை மேலும் குறைக்க அவர் எடுத்த முயற்சி செல்லுபடியாகவில்லை. முன்னாள் மனைவிக்கு 2.3 மில்லியன் வெள்ளியைக் கொடுக்குமாறு ஆடவருக்கு உத்தரவிடப்பட்டது. அந்த தொகையைக் குறைக்கவேண்டும் என்பது அவரின் வாதம். கொவிட்-19 சூழலால் தனது மூன்று சொத்துகளில் ஒன்றை விற்க ஆடவர் சிரமப்பட்டது இதற்குக் காரணம்.
எங் கொங் பிளேஸில் உள்ள அந்தச் சொத்து சென்ற ஆண்டு பிப்ரவரி மாதம் 2.4 மில்லியன் வெள்ளிக்கு விற்பனையானது. இந்தத் தொகை, அதன் மதிப்பைவிட 1.1 மில்லியன் வெள்ளி குறைவு. வீட்டை விற்றத் தொகையில் தான் கட்டவேண்டிய வட்டியை தள்ளுபடி செய்யுமாறும் ஆடவர் கேட்டுக்கொண்டார். இது, அரசாங்கத்தின் கொவிட்-19 உதவிக் கட்டமைப்புக்கு ஏற்றவாறு அமையும் என்பது அவரின் வாதம்.
ஆடவரின் முயற்சியை மேல்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்தது. இது, "நேரத்தையும் வளங்களையும் வீணாக்கும் முயற்சி" என்றும் நீதிமன்ற முறையைத் தவறாகப் பயன்படுத்தும் நடவடிக்கை என்றும் அது சாடியது. முதலில் எடுக்கப்பட்டதே இறுதி முடிவு என்றும் அது குறிப்பிட்டது.

