மலேசியாவைச் சேர்ந்த திருவாட்டி கூ யீ ஜூவின் உடல் கடந்த செவ்வாய்க்கிழமை பாசிர் ரிஸில் உள்ள அப்பி அப்பி ஆற்றில் கண்டெடுக்கப்பட்டது.
செவ்வாய்க்கிழமை மாலை சுமார் ஏழரை மணிக்கு சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு அழைப்பு வந்தது. காவல்துறைக்கு மாலை 7.11 மணிக்கு அழைப்பு வந்திருக்கிறது.
பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்திலேயே அவர் மரணமடைந்ததை மருத்துவ உதவியாளர்கள் உறுதிப்படுத்தியதாகக் காவல்துறையினர் கூறினர். இச்சம்பவத்திற்குப் பின்னால் தீய செயல் ஏதும் இடம்பெற்றதாகத் தாங்கள் சந்தேகப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
உடல் கண்டெடுக்கப்பட்டதற்கு மூன்று நாள்களுக்கு முன்னர் திருவாட்டி கூ காணாமற்போனார். சை சீ தொழில்துறைப் பூங்காவிற்கு எதிரே உள்ள பேருந்து நிறுத்தத்தில் திருவாட்டி கூ கடைசியாகக் காணப்பட்டதாக அவரின் 46 வயது உறவினர் திருவாட்டி ஹுவாங் யான்யிங் சாவ்பாவ் நாளிதழிடம் தெரிவித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை ஆறு மணியளவில் வேலையிலிருந்து புறப்பட்ட பிறகு திருவாட்டி கூ பேருந்து நிறுத்தத்தில் இருந்திருக்கிறார். அவருடன் இரு சக ஊழியர்களும் அங்கு இருந்தனர்.
நிறுத்தத்திற்கு வந்த பேருந்தை நோக்கித் திருவாட்டி கூ நடந்துசெல்வதை அவர்கள் பார்த்திருக்கின்றனர். ஆனால் அந்தப் பேருந்தில் அவர் ஏறியதை சக ஊழியர்களால் உறுதிப்படுத்தமுடியவில்லை.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பின்னிரவு இரண்டு மணியளவில் திருவாட்டி ஹுவாங் காவல்துறையிடம் புகார் கொடுத்தார்.
பட்டக் கல்வியை முடித்த பிறகு திருவாட்டி கூ சிங்கப்பூருக்கு வந்திருக்கிறார். சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் துணைப் பாட நிலையம் ஒன்றில் சீனம் கற்றுத் தரும் துணை ஆசிரியராகச் சேர்ந்துகொண்டார்.
இச்சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.