சாங்கி விமான நிலையத்தில் சென்ற மாதம் 817,000 பயணிகள் வந்து சென்றிருக்கின்றனர். சென்ற ஆண்டு முழுவதும் மொத்தமாக ஏறக்குறைய மூன்று மில்லியன் பயணிகள் வந்து சென்றனர்.
சென்ற ஆண்டின் மொத்த பயணிகள் எண்ணிக்கையில் டிசம்பர் மாதம் பதிவானது கால் பங்கிற்கும் அதிகம் என்று சாங்கி விமான நிலையக் குழுமம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.
கடந்த நவம்பர் மாதம் பதிவானதைவிட, சென்ற மாதம் வந்து சென்ற பயணிகளின் எண்ணிக்கை இரு மடங்கிற்கும் அதிகம். 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவல் மோசமடைந்தது. அதற்குப் பிறகு சென்ற மாதம்தான் ஆக அதிகமான பயணிகள் சாங்கி விமான நிலையத்திற்கு வந்து சென்றிருக்கின்றனர்.
எனினும், இயல்புநிலையைக் காட்டிலும் சாங்கி விமான நிலையத்தின் நிலவரம் இன்னமும் மோசமாகவே உள்ளது. கொள்ளைநோய்ப் பரவல் தொடர்ந்து பயணத் துறையை முடக்கிப்போடுவது இதற்குக் காரணம். சென்ற ஆண்டு பதிவான பயணிகளின் எண்ணிக்கை, 2019ஆம் ஆண்டு பதிவானதில் 4.5 விழுக்காடு மட்டுமே.