கி. ஜனார்த்தனன்
ஓமிக்ரான் கொவிட்-19 கிருமித் தொற்று அலை மேலும் பலரைப் பாதிக்கக்கூடிய நிலையில் வர்த்தகங்கள் தங்களது செயல்பாடுகளில் ஏற்படும் இடையூறுகளைக் குறைக்க, அபாயங்களைக் கையாளும் திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்தி பாதுகாப்பு நிர்வாக விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். கடந்த ஒரு வாரமாக ஓமிக்ரான் தொற்று எண்ணிக்கை விரைவாக அதிகரித்ததை அடுத்து, சுகாதார அமைச்சு இந்த எச்சரிக்கையை முதலாளிகளுக்கு விடுத்துள்ளது.
ஊழியர்களுக்கு கிருமித்தொற்று ஏற்படும் அபாயத்தைச் சமாளிக்க, அவர்கள் பிரிக்கப்பட்ட குழுக்
களாகப் பணியாற்றுவதற்கு ஏற்பாடு செய்வது உள்ளிட்ட வர்த்தகத் தொடர்ச்சி உத்திகளைச் செயல்படுத்த சுகாதார அமைச்சு வர்த்தகங்களுக்கு, குறிப்பாக அத்தியாவசிய சேவைகளை வழங்கும் வர்த்தகங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. வீட்டிலிருந்து வேலை செய்வோரில் பாதி பேர் வேலையிடத்திற்குத் திரும்பலாம் போன்ற தற்போதைய பாதுகாப்பு நிர்வாக நட
வடிக்கைகளை வர்த்தகங்கள் அணுக்கமாக பின்பற்றவேண்டும் என்றும் அமைச்சு கூறியது.
வேலையிடத்தில் பணியாற்றும் ஊழியர்கள் சமூக ஒன்றுகூடல்களில் பங்கேற்காமல் இருப்பதையும் சாப்பிடுவதற்காக அவர்கள் எடுக்கும் இடைவேளைகளைத் தனித்தனியே எடுப்பதையும் முதலாளிகள் உறுதி செய்யவேண்டும்.
கொவிட்-19க்கு எதிரான அமைச்சுகள் நிலைப் பணிக்குழுவின் இணைத் தலைவரும் நிதிஅமைச்சருமான லாரன்ஸ் வோங், "இதனால்தான் தனிமனிதப் பொறுப்பு மிகவும் முக்கியம். எல்லோரும் தங்களது பங்கை ஆற்றி, எங்கு சென்றாலும் பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகளைக் கடைப்பிடித்து அடிக்கடி சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்," என்று நேற்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தின்போது கூறினார்.
"உங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தால், சாதாரண சளியைப் போன்ற அறிகுறிகள் தென்பட்டாலும்கூட கவனமின்றி செயல்படாதீர்கள். உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வீட்டிலிருந்தே வேலை செய்யுங்கள்," என்று அவர் கூறினார்.
"வீட்டிலிருந்து உங்களால் பணியாற்ற இயலாமல் வேலைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும்போது அந்நேரத்தில் இலேசான அறிகுறிகள் மட்டும் இருந்து நீங்கள் ஆரோக்கியமாக இருப்பதை உணர்ந்தாலும் ஏஆர்டி சோதனை எடுத்துக்கொண்டு உங்களால் பிறருக்குக் கிருமி பரவாது என்பதை உறுதி செய்வது சிறந்தது," என்றும் அவர் கூறினார்.
"ஒருவேளை, வேலையிடத்தில் ஒருவருக்கு மட்டும் கிருமித்தொற்று ஏற்பட்டாலும் பிறருக்கு அது பரவி வேலையிடத்தில் பெரிய இடையூறை ஏற்படுத்திவிடாது," என்றார் அவர்.