பிள்ளைகளிடையே அதிகம் நடமாடாமல் இருக்கும் போக்கு வளராமல் இருக்கப் பெற்றோர் தங்களின் குழந்தைகளுடன் தொலைக்காட்சி பார்ப்பதைத் தவிர்க்கவேண்டும். ஒரு மணிநேரத்துக்கும் மேலாக குழந்தைகளைக் கவனிக்காமல் தனியாக விடக்கூடாது. பெரியவர்களான பிறகு பிள்ளைகள் ஆரோக்கியமாக இருக்க இத்தகைய முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். சிங்கப்பூரில் முதன்முறையாக வெளியிடப்பட்ட கைக்குழந்தைகள், குழந்தைகள், மழலையர் ஆகியோருக்கான ஒருங்கிணைக்கப்பட்ட வழிகாட்டிகளில் இந்தப் பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளன.
இந்த வழிகாட்டிகள் 24 மணிநேரத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கானவை. இவற்றின்கீழ் உடல்ரீதியான நடவடிக்கைகள், நடமாட்டம் அதிகம் இல்லாமல் இருப்பது, தூக்கம், உணவுப் பழக்க வழக்கங்கள் ஆகிய நான்கு அம்சங்களின் அடிப்படையில் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.
ஐந்தில் இரு கைக்குழந்தைகள் சராசரியாக ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம் தொலைக்காட்சி பார்க்கின்றனர். ஐந்தில் நான்கு குழந்தைகள் 30 நிமிடங்களுக்குத் தொலைக்காட்சி பார்க்கின்றனர்.
"இவ்விரு பிரிவுகளைச் சேர்ந்த குழந்தைகள் தொலைக்காட்சி பார்ப்பது நல்லதன்று, அதற்கான நேரத்தை முடிந்தவரை குறைக்கவேண்டும்," என்று மெய்நிகராக நடைபெற்ற வழிகாட்டிகள் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சுகாதார மூத்த துணை அமைச்சர் கோ போ கூன் கூறினார். குழந்தைப் பருவத்தில் ஆரோக்கியமாக இருப்பது பிற்காலத்தில் உடல்நலனிலும் சுகாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் டாக்டர் கோ சுட்டினார். "உடல் பருமான இருக்கும் ஒரு குழந்தை பெரியவரான பிறகும் அவ்வாறே இருக்க வாய்ப்புண்டு என்று கூறப்படுவது உண்மைதான்," என்று சொன்ன டாக்டர் கோ, பெரியவரான பிறகும் உடல் பருமனாக இருந்தால் அது நீரிழிவு நோய் போன்றவற்றுக்கு வழிவகுக்கும் என்றும் எச்சரித்தார்.
கைக்குழந்தைகள், குழந்தைகள், மழலையருக்கான வழிகாட்டிகளை bit.ly/33U8Bz4 எனும் இணைய முகவரியில் காணலாம்.

