கொள்ளைநோய்ப் பரவல் சூழல் கடுமையாக இருந்த காலத்தில் சிங்கப்பூரர்களிடையே உடற்பயிற்சி உட்பட உடல்ரீதியான நடவடிக்கைகளில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்ததென சுகாதார மேம்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் ஒன்றாம் தேதிவரை கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த 'சர்க்கிட் பிரேக்கர்' எனும் நோய்ப் பரவல் முறியடிப்புக் காலம் நடப்பில் இருந்தது. அந்த காலகட்டத்தில் சராசரியாக எடுத்துவைக்கும் காலடிகளின் எண்ணிக்கை 8,050லிருந்து 4,320க்கு சரிந்தது.
தினந்தோறும் மக்கள் உடற்பயிற்சிக்காக செலவிடும் நேரமும் சுமார் ஒன்றரை மணிநேரத்திலிருந்து 59 நிமிடங்களுக்குக் குறைந்தது. அதிகக் களைப்பை ஏற்படுத்தாத உடற்பயிற்சி செய்வோர் முதல் உடலை வறுத்திக்கொள்வோர் வரை இவர்களில் அடங்குவர்.
'நேஷனல் ஸ்டெப்ஸ் சேலஞ்' எனும் மக்கள் எடுத்துவைக்கும் காலடிகளைக் கணக்கிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதன் முக்கியத்துவதை வலியுறுத்தும் திட்டத்தை சுகாதார மேம்பாட்டு வாரியம் ஆறாவது முறையாக நடத்தி வருகிறது. கொவிட்-19 சூழலிலும் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள மக்களை ஊக்குவிப்பதற்கு இத்திட்டத்தில் சென்ற ஆண்டு புதிய சவால் சேர்க்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சென்ற ஆண்டு மக்கள் சராசரியாக எடுத்துவைத்த காலடிகளின் எண்ணிக்கை மீண்டும் 8,000த்தைத் தொட்டது.