முரசொலி
இன்றைய உலகப் பொருளியலும் சமூக வாழ்வு முறையும் பணத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருப்பதால் நிதிச் சேவைகள் ஒவ்வொரு மனிதனின் அன்றாட வாழ்வில் தவிர்க்க இயலாததாக ஆகிவிட்டன. வங்கிகளும் நிதி நிறுவனங்களும் இத்தகைய சேவைகளை வழங்கி வருகின்றன.
நிதித் துறை வங்கிகளை, நிறுவனங்களை, அமைப்புகளைக் கட்டுப்படுத்தவும் வாடிக்கையாளர்களின் நலன்களைப் பாதுகாக்கவும் ஒவ்வொரு நாட்டிலும் அரசாங்கத்திற்குச் சொந்தமான மைய அமைப்பு ஒன்று செயல்படுகிறது. அது நிதித் துறை நிறுவனங்களை எல்லாம் ஒழுங்குபடுத்தி வருகிறது.
உலகம் எங்கும் வங்கிகள், நிதி நிறுவனங்கள் எல்லாம் முன்புபோல் இப்போது இல்லை. அதேபோல் வாடிக்கையாளர்கள் சேவைகளைப் பெறுவதும் பல்வேறு செயல்களைச் செய்வதும் தலைகீழாக மாறிவிட்டன. இணையம் என்ற வசதி உலகுக்குக் கிடைத்ததுதான் இதற்கான காரணம்.
இப்போதெல்லாம் கைபேசியில் உள்ள ஒரு பொத்தானைத் தொட்டாலே போதும். செய்ய வேண்டிய காரியம் கண்மூடி கண் திறப்பதற்குள் முடிந்துவிடுகிறது. யாரும் வங்கிகளுக்கோ நிதி நிறுவனங்களுக்கோ நேரடியாகச் செல்ல வேண்டிய தேவை அவ்வளவாக இல்லாமல் போய்விட்டது.
பொதுவாக எல்லாத் துறைகளுமே மின்னிலக்கமாக மாறிவிட்டன. அதுவும் நிதித் துறையில் அந்த வேகம் அதிகமாக இருக்கிறது. இது அவசியமானதாகவும் ஆகிவிட்டது. மின்னிலக்க வங்கி முறை என்பது இன்றைய வாழ்வில் வலது கை போன்று தவிர்க்க இயலாததாக இருக்கிறது.
அதுவும் உலகின் நிதி மையமாக இருக்கின்ற சிங்கப்பூர் மின்னிலக்க நிதித்துறையில் முன்னணியில் இருந்தாகவேண்டிய கட்டாயம் உள்ளதால் இதை உணர்ந்து அரசாங்கம் நிதித்துறையை பெரிய அளவில் மின்னிலக்கமயமாக்கி உள்ளது.
நிதித்துறையையும் அந்தத் துறை வழங்கும் சேவைகளையும் பொறுத்தவரை நாணயம், நம்பிக்கை இரண்டும் எப்போதுமே இரு தூண்கள் என்பதை மறுப்பதற்கில்லை. அதோடு, வாடிக்கையாளரின் பாதுகாப்பும் மிக முக்கியமானது.
மின்னிலக்க வங்கி முறையில் இவற்றை, முக்கியமாக வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கூடுதல் முயற்சிகள் தேவைப்படுகின்றன. காரணம், மின்னிலக்க வங்கி முறையில் எந்த அளவுக்கு அதிக வசதிகள் உண்டோ அந்த அளவுக்கு ஆபத்துகளும் நிறைந்து இருக்கின்றன.
இணையத்தைப் பயன்படுத்தி வங்கிகள், நிதி நிறுவனங்களைப் போலவே செயல்பட்டு மோசடி செய்து வாடிக்கையாளர்களை ஏமாற்றுவதற்கு மின்னிலக்க வங்கி முறையில் மோசடிப் பேர்வழிகளுக்கு வசதிகள் அதிகம் என்பதால் கரணம் தப்பினால் மரணம் என்ற எச்சரிக்கையுடன்தான் எப்போதுமே செயல்பட வேண்டி இருக்கிறது.
வாடிக்கையாளர்களுக்கு அறவே சந்தேகம் ஏற்படாத வகையில் நம்பிக்கைக்குரிய வங்கிகளின், நிதி அமைப்புகளின் பெயர்களைப் பயன்படுத்தி மிகவும் தந்திரமாகத் தில்லுமுல்லுக்காரர்கள் செயல்படுகிறார்கள். வங்கி வாடிக்கையாளர்களைக் குறிவைத்து குறுஞ்செய்திகள் மூலம் ஏமாற்றுவதற்கான முயற்சிகள் கூடி வருகின்றன.
இத்தகைய முயற்சிகள் நாளுக்கு நாள் புதுப்புது வடிவில் இடம்பெறுகின்றன. மோசடிகள் இப்போது அதிகரித்துவிட்டதாக சிங்கப்பூர் காவல்துறையும் உச்ச நீதிமன்றமும் மிக முக்கியமான எச்சரிக்கைகளை விடுத்து இருக்கின்றன.
இவற்றை எல்லாம் கருத்தில்கொண்டு வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை ஒன்றுக்கு இருமுறை வலுவாக உறுதிப்படுத்தும் நோக்கத்தில் சிங்கப்பூரின் மைய வங்கியான சிங்கப்பூர் நாணய ஆணையமும் சிங்கப்பூர் வங்கிகள் சங்கமும் பலதரப்பட்ட கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை நடப்புக்கு கொண்டு வருகின்றன.
கட்டுப்பாடுகளை உடனடியாகக் கடுமையாக்குவதற்குப் பல்வேறு நடவடிக்கைகளை எடுப்பதும் நீண்டகாலப் போக்கில் மோசடிகளைத் தடுப்பதும் அத்தகைய நடவடிக்கைகளின் நோக்கம்.
ஆகையால் அடுத்த ஓரிரு வாரங்களில் குறுஞ்செய்திகள், மின்னஞ்சல் தொடர்பில் வாடிக்கையாளர்கள் சில மாற்றங்களை எதிர்பார்க்கலாம். இவை எல்லாம் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் என்று திட்டவட்டமாக நம்புவதற்கு இடம் இருக்கிறது.
மோசடி மிரட்டல்கள் இணையத்தில் கூடி வருவதால் அதைச் சமாளிக்க போதுமான அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் இருப்பதை உறுதிப்படுத்த மிக முக்கிய நிதி நிறுவனங்களின் மோசடி, தில்லுமுல்லு கண்காணிப்பு ஏற்பாடுகளை இந்த ஆணையம் தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.
இது ஒருபுறம் இருக்க, மோசடிகளைக் கண்டுபிடித்து அவற்றைத் தடுப்பதற்கு மிகப் பாதுகாப்பான அம்சங்களை சிங்கப்பூரில் செயல்படக்கூடிய அனைத்து நிதி நிறுவனங்களும் நடைமுறைப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கலாம்.
இவை எல்லாம் வாடிக்கையாளர்களைப் பாதுகாப்பதற்காக சம்பந்தப்பட்ட அமைப்புகள் எடுக்கப் போகும் நடவடிக்கைகள். அதேநேரத்தில் வாடிக்கை யாளர்கள் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டியது கட்டாயமானது.
மின்னிலக்க வங்கி முறையைப் பொறுத்தவரை, தங்களுக்குத்தான் பொறுப்புகள் அதிகம் என்பதை ஒவ்வொரு வாடிக்கையாளரும் மறந்துவிடக் கூடாது.
மின்னிலக்க வங்கி முறைக்கு இணையம் வழி புதுப்புது பாணிகளில் தொடர்ந்து மோசடி மிரட்டல்கள் வரத்தான் செய்யும். வாடிக்கையாளர்கள் விழிப்புடன் இருந்தாலொழிய அத்தகைய மோசடிகளில் இருந்து தப்புவது என்பது இயலாத ஒன்று.
இணைய உலகில் எப்படி செயல்படுவது என்பதை ஒவ்வொருவரும் கூடுமானவரை சந்தேகம் இல்லாமல் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
கைபேசி வழியாக, மின்னிலக்க ரீதியில் பணத்தை அனுப்புவது, பணத்தைக் கொடுப்பது, பெறுவது போன்ற காரியங்கள் எல்லாம் மிகவும் வசதியானவைதான். ஆனால் அவற்றை மிகவும் பாதுகாப்புடன் செய்தால்தான் விரும்பிய பலன் ஏற்படும். இல்லை எனில் ஏமாந்துபோக வேண்டிய நிலைதான் ஏற்படும். வங்கிகளும் நிதி நிறுவனங்களும் தங்கள் பொறுப்புகளைச் செவ்வனே நிறைவேற்றினால் மட்டும் போதாது.
மோசடிப் பேர்வழிகளின் இலக்கு அப்பாவி வாடிக்கையாளர்கள்தான் என்பதால் இதில் வாடிக்கையாளர்களுக்குத்தான் பொறுப்பு அதிகம்.
அவர்கள் முன்பின் தெரியாதவர்களை நம்பி சொந்தத் தகவல்களை ஒருபோதும் கொடுக்கக் கூடாது. மின்னிலக்க வங்கி முறையில் விழித்துக் கொண்டே இருந்தால்தான் எப்போதுமே தப்பித்துக் கொண்டே வாழ முடியும்.