சிங்கப்பூரில் வெள்ளிக்கிழமை புதிதாக 3,155 பேருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக அமைச்சு கூறியது.
வாராந்திர தொற்று விகிதம் கடந்த வெள்ளிக்கிழமை 2.7 ஆகக் கூடியது.
முந்திய வாரத்தைவிட கடந்த வாரம் தொற்று எப்படி இருந்தது என்பதைக் காட்டும் இந்த அளவு, வியாழக்கிழமை 2.17 ஆக இருந்தது என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.
புதிதாக கிருமி தொற்றியோரில் 1,616 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மூலம் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்களில் 1,278 பேர் உள்ளூர்வாசிகள்; 338 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்.
ஏஆர்டி பரிசோதனை மூலம் 1,539 பேருக்குத் தொற்று தெரியவந்தது. அவர்களில் 1,516 பேர் உள்ளூர்வாசிகள்; 23 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்.
ஒருவர் மாண்டுவிட்டதாகவும் அமைச்சு கூறியது. மொத்த மரண எண்ணிக்கை 846 ஆகியது.
சிங்கப்பூரில் கொரோனா தொற்றியோரின் மொத்த எண்ணிக்கை வெள்ளிக்கிழமை நிலவரப்படி 307,813. மருத்துவமனைகளில் 360 பேர் சிகிச்சை பெறுகிறார்கள். 13 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.
ஏஆர்டி பரிசோதனை மூலம் தொற்று இருப்பது தெரியவந்தது பற்றி வெள்ளிக்கிழமை முதன்முதலாக அமைச்சு தெரிவித்தது.
சுகாதார அமைச்சர் ஓங் யி காங் அன்று நடந்த செய்தியாளர் மாநாட்டில் அன்றாட கிருமித்தொற்று பற்றிய தகவல்களில் இடம்பெறக்கூடிய மாற்றம் பற்றி குறிப்பிட்டு இருந்தார்.
அதன்படி ஓமிக்ரான் தொற்றுக்கும் இதர கொவிட்-19 தொற்றுகளுக்கும் இடையில் வேறு படுத்திக் காட்டப்படும் நிலை இருக்காது என்று அவர் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதி பெற்றவர்களில் 91 விழுக்காட்டினர் முற்றிலும் தடுப்பூசி போட்டுள்ளனர். 54% மக்கள் கூடுதல் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.