சிங்கப்பூரில் போதைப்பொருளைச் சட்டவிரோதமாகப் புழங்கி கைதானவர்களின் எண்ணிக்கை கடந்த 1990களில் ஆண்டுக்கு ஏறத்தாழ 6,000 ஆக இருந்தது.
இந்த எண்ணிக்கை இப்போது பாதியாகக் குறைந்துவிட்டது. இருந்தாலும்கூட போதைப்பொருள் குற்றங்களுக்கு எதிரான சிங்கப்பூரின் கடுமையான அணுகுமுறை நீண்டகாலத்திற்குத் தொடர்ந்து இருந்து வரும் என்று உள்துறை, சட்ட அமைச்சர் கா சண்முகம் தெரிவித்து இருக்கிறார்.
"போக்குவரத்து மையமாக இருக்கின்ற சிங்கப்பூரில் கடுமையான சட்டதிட்டங்கள் இல்லை என்றால், போதைப்பொருள் புழக்கத்தைக் கண்டுபிடித்து அதை ஒடுக்க அமலாக்க நடவடிக்கைகள் செம்மையானவையாக இல்லை என்றால், நாட்டின் உள்ளே போதைப்பொருள் புகுந்துவிடும்," என்று அமைச்சர் தெரிவித்தார்.
சிறிய ஒரு நாடு என்ற முறையில் சட்டவிரோத போதைப்பொருள் செயல்களை அறவே சகித்துக் கொள்ளாத அணுகுமுறையை சிங்கப்பூர் கடைப்பிடிக்க வேண்டும் என்று அண்மையில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் திரு சண்முகம் குறிப்பிட்டார்.
மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் 50வது ஆண்டைக் குறிக்கும் வகையில் அமைச்சரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்குத் திரு சண்முகம் பதிலளித்தார்.
பல நாடுகளில் பரவலான போதைப் பித்து காரணமாக பெரும் பாதிப்புகள் ஏற்பட்டு இருக்கின்றன என்பதைச் சுட்டிய அமைச்சர், அத்தகைய பாதிப்புகள் நமக்குத் தாங்காது என்று குறிப்பிட்டார்.
இவ்வேளையில், உலகிலேயே போதைப்பொருளை ஆக அதிகமாக உற்பத்தி செய்கின்ற ஒரு பகுதிக்கு அருகே சிங்கப்பூர் அமைந்து இருப்பதை மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் இயக்குநரான இங் செர் சோங் சுட்டிக்காட்டினார்.
தங்க முக்கோணம் என்று குறிப்பிடப்படும் அந்தப் பகுதி தாய்லாந்து, லாவோஸ், மியன்மார் எல்லைகள் சந்திக்கும் இடத்தில் அமைந்து இருக்கிறது.