நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக (என்டியு) ஏற்பாட்டில் 300 குடும்பங்களுக்கு இலவசமாக மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு சுவா சூ காங் பகுதியில் வசிக்கும் வசதி குறைந்த குடும்பங்கள், 'சேவை வாரம்' என்ற நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக அந்த கணினிகளைப் பெற்றுள்ளனர்.
இந்தப் பல்கலைக்கழகம் 'என்டியு சேவை வாரம்' என்ற ஒரு நிகழ்ச்சியை நேற்று தொடங்கியது. 30வது ஆண்டுவிழாவைக் குறிக்கும் வகையில் இடம்பெறும் அந்த நிகழ்ச்சி இம்மாதம் 29ஆம் தேதி வரை நீடிக்கும்.
இந்தப் பல்கலைக்கழக பள்ளிகள், மாணவர் மனமகிழ் மன்றங்கள், துறைகள், முன்னாள் மாணவர் சங்கங்கள் ஆகியவற்றைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட தொண்டூழியர்கள் பல்கலைக்கழகத்தின் பல்வேறு சமூக சேவை திட்டங்களில் கலந்துகொள்ள கையெழுத்திட்டு இருக்கிறார்கள்.
அவற்றின் மூலம் சிங்கப்பூரிலும் கம்போடியா, மலேசியா போன்ற வட்டார நாடுகளிலும் 5,000 பேர் நன்மையடைவார்கள் என்று மதிப்பிடப்படுகிறது.
மின்னிலக்கமயம், சுகாதார நல்வாழ்வு, சமூக நல்வாழ்வு, இயற்கை வளங்களைக் கட்டிக்காப்பது ஆகிய துறைகளில் அந்தப் பல்வேறு சேவைத் திட்டங்களும் ஒருமித்த கவனம் செலுத்துகின்றன.
இந்தத் திட்ட தொண்டூழியர்கள் இதர பல வழிகளிலும் மாணவர்களுக்கும் முதியவர்களுக்கும் உதவி வருகிறார்கள். நன்யாங் பல்கலை சேவை வாரத்தை தென்மேற்கு மாவட்ட மேயர் லோ யென் லிங்கும் பல்கலைக்கழகத் தலைவர் பேராசிரியர் சுப்ரா சுரேஷும் நேற்று தொடங்கி வைத்தனர்.
தென்மேற்கு மாவட்டத்தில் வசதி குறைந்த மக்கள் மேம்பட உதவும் பல்வேறு திட்டங்களில் இப் பல்கலைக்கழகம் தன் நேரத்தை யும் ஆற்றலையும் ஆதரவையும் வழங்கி வருவதாக நிகழ்ச்சியில் பேசிய திருவாட்டி லோ கூறினார்.