சிங்கப்பூரில் தொழிற்பேட்டை ஒன்றில் ஒரு சமய ஊர்வலத்தில் பலர் பங்கெடுத்துக் கொண்டதாகக் கூறப்படும் ஒரு நிகழ்ச்சி பற்றி காவல்துறை ஆராய்ந்து வருகிறது.
அந்தச் சம்பவத்தைக் காட்டும் காணொளிகளும் புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் பரவி வருவது தெரியும் என்று காவல் துறை தெரிவித்தது.
அந்தக் காணொளிகளிலும் புகைப்படங்களிலும் சிலர் ஆடிப் பாடுவதுடன் மத்தளம் அடிப்பதும் தெரிகிறது. குறைந்தது ஒருவர் காவடி எடுப்பதும் அவற்றில் தெரிந்தது.
காணொளிகளில் பல்வேறு இனத்தவர் முகக்கவசம் அணியாமல் பாடிக்கொண்டு வளாகத்துக்குள் கார்கள் செல்லும் சுழல்பாதையில் நடந்துசென்றது காணப்பட்டது.
வேறொரு காணொளியில் ஆடவர் ஒருவர் தேர் இழுத்துச் சென்றதாகத் தெரிந்தது.
மற்றொரு காணொளியில், தற்காலிக வழிபாட்டு இடமாகத் தெரியும் ஓர் இடத்தின் முன்னால் ஒருவர் காவடி தூக்கி ஆடுவது போலத் தெரிந்தது.
அந்தச் சம்பவம் குறித்த கேள்விகளுக்குப் பதில் அளித்து காவல்துறை கடந்த வெள்ளிக்கிழமை அறிக்கை விடுத்தது.
ஜூரோங் அருகே உள்ள 'தோ குவான் ரோடு ஈஸ்ட்டில்' உள்ள தொழிலியல் கட்டடத்தில் சமய ஊர்வலம் நடந்ததாகக் கூறப்படுவதைப் பற்றி, உரிய அதிகாரிகளுடன் இணைந்து ஆராய்ந்து வருவதாக அதில் காவல்துறை கூறியது.
தேங் ரோட்டில் உள்ள அருள் மிகு தெண்டாயுதபாணி கோயிலில், ஜனவரி 18 அன்று இந்த ஆண்டின் தைப்பூசத் திருவிழா கடுமையான கட்டுப்பாடுகளுடன் நடந்தது.
அதில் சுமார் 14,000 பேர் கலந்துகொண்டனர்.