அதிக எண்ணிக்கையில் கொவிட்-19 கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவானாலும் நிலைமையைச் சமாளிக்க மாற்று ஏற்பாடுகளைப் பெரும்பாலான உணவு, பானக் கடைகள் செய்து வைத்துள்ளன. சிங்கப்பூர் உணவகச் சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் இதைத் தெரிவித்தார். வெவ்வேறு நேரங்களில் ஊழியர்களை பணியில் ஈடுபடுத்துவது, பல்வேறு கிளைகளில் அவர்களை வேலைக்கு அனுப்பாமல் இருப்பது போன்றவை அவற்றில் அடங்கும்.
"முன்னணிப் பணியாளர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்ய முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து உணவு, பானக் கடைகளும் விதிமுறைகளின்படி பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றன," என்று உணவகச் சங்கத்தின் பேச்சாளர் குறிப்பிட்டார்.
கிருமித்தொற்று சம்பவங்கள் அதிகரித்துவரும் வேளையில் முடிந்தவரை வர்த்தகம் பாதிப்படையாமல் இருக்க தகுந்த நடவடிக்கைகளை எடுக்குமாறும் பாதுகாப்பு விதிமுறைகளை அணுக்கமாகப் பின்பற்றுமாறும் அரசாங்கம் நிறுவனங்களைக் கேட்டுக்கொண்டது.
அதைத் தொடர்ந்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸின் கேள்விகளுக்கு உணவகச் சங்கம் பதிலளித்தது. மனிதவளப் பற்றாக்குறை ஏற்பட்டால் அதைச் சமாளிக்க நிறுவனங்கள் தயாராய் இருக்கவேண்டும் என்றும் அரசாங்கம் சுட்டியது.
கொள்ளைநோய்ப் பரவல் தொடங்கியதிலிருந்தே உணவு, பானத் துறை மனிதவளப் பற்றாக்குறை சவாலை எதிர்கொண்டு வருவதாக உணவகச் சங்கத்தின் பேச்சாளர் குறிப்பிட்டார்.