கொள்ளைநோய்ப் பரவல் சூழலும் சில இளையர்களை சமூகத்திற்குத் தொண்டாற்றுவதிலிருந்து நிறுத்தவில்லை. கொவிட்-19 சூழலால் தொண்டூழிய நடவடிக்கைகளுக்கு இடையூறு வந்தபோதும் இவர்கள் தொடர்ந்து தொண்டூழிய முயற்சிகளை எடுத்திருக்கின்றனர்.
மூத்த குடிமக்களுக்கு உதவிக்கரம் நீட்டியது உள்ளிட்ட இவர்களின் சில தொண்டூழிய முயற்சிகளை 'யூத் கோர்ப்ஸ் சிங்கப்பூர் லீடர்ஸ் புரோகிராம்' எனப்படும் சிங்கப்பூர் இளையர் படைத் தலைவர்கள் திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியில் அதிபர் ஹலிமா யாக்கோப் சுட்டிக்காட்டினார்.
கொள்ளைநோய்ப் பரவல், வசதி குறைந்தோரை மேலும் சிரமப்படுத்தியிருக்கலாம். ஆனால், கொவிட்-19 விதிமுறைகளைப் பின்பற்றியவாறு தொடர்ந்து தொண்டூழியத்தில் ஈடுபட இளையர் படை தனது முயற்சிகளை மாற்றியமைத்துக்கொண்டது என்று சன்டெக்கில் உள்ள சிங்கப்பூர் மாநாட்டு, கண்காட்சி நிலையத்தில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் பேசியபோது திருவாட்டி ஹலிமா குறிப்பிட்டார். தங்களின் நடவடிக்கைகளை இணையம்வழி மேற்கொண்டதும் மாற்றியமைக்கப்பட்ட முயற்சிகளில் அடங்கும்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் எட்வின் டோங்குடன் 2020, 2021ஆம் ஆண்டுகளில் இளையர் படை தலைவர்கள் திட்டத்தில் இடம்பெற்றோருக்குத் திருவாட்டி ஹலிமா சான்றிதழ்களை வழங்கினார். இத்திட்டத்தின்கீழ் 17லிருந்து 25 வயதுக்கு உட்பட்ட இளையர்கள் ஒன்பது மாதங்கள் முதல் ஓராண்டு வரை நீடிக்கும் முயற்சிகளைக் கையாளலாம். 2020, 2021ஆம் ஆண்டுகளில் மொத்தம் 400 இளையர்கள் இத்திட்டத்தில் ஈடுபட்டனர்.