போலி தடுப்பூசி விவரங்களைத் தாக்கல் செய்ததாகக் கூறப்படுவதையொட்டி நடவடிக்கை
'ஹீலிங் த டிவைடு' என்ற தடுப்பூசிக்கு எதிரான அமைப்பை ஏற்படுத்திய திருவாட்டி ஐரிஸ் கோ கைதாகி இருக்கிறார். அவரோடு ஒரு மருத்துவரும் உதவியாளரும் கைதாயினர்.
தடுப்பூசி சான்றிதழ்களில் சட்டவிரோத மாற்றங்களைச் செய்து அவற்றைச் சுகாதார அமைச்சிடம் தாக்கல் செய்யவும் ஏமாற்றவும் சதித்திட்டம் போட்டதாகக் கூறப்படுவதன் தொடர்பில் அதிகாரிகள் அவர்களுக்கு எதிரான நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரியவந்துள்ளதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியது.
தாங்கள் 40 மற்றும் 33 வயதுள்ள இரண்டு ஆடவர்களையும் 46 வயதுள்ள மாது ஒருவரையும் கைது செய்து இருப்பதாக காவல்துறை அறிக்கை ஒன்றில் தெரிவித்தது. அந்தச் சதியில் சம்பந்தப்பட்டு இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் இதர எட்டு பேர் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறை தெரிவித்தது.
கைதாகி இருக்கும் மருத்துவரும் அவரின் உதவியாளரும் தனிப்பட்டவர்கள் சார்பில் போலியான ஆவணங்களைத் தாக்கல் செய்து அதன் மூலம் சுகாதார அமைச்சை ஏமாற்ற சதித்திட்டம் போட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது என்றும் அது முதல்கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளதாகவும் காவல்துறை தெரிவித்தது.
கைதான மூவர் மீதும் நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அவர்களில் ஒருவரான திருவாட்டி கோ விசாரிக்கப்பட்டு வருகிறார். மருத்துவரும் அவரின் உதவியாளரும் மேல் விசாரணைக்காக விசாரணைக் காவலில் வைக்கப்பட்டு உள்ளனர்.
இதனிடையே, பிடோக்கில் செயல்படும் 'வான் மெடிக்கல் கிளினிக்' என்ற மருந்தகத்தைச் சேர்ந்த ஒரு மருத்துவரை தான் விசாரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
கொவிட்-19 தடுப்பூசி ஆவணங்களில் இடம்பெற்ற சட்ட விரோதமான திருத்தங்கள் தொடர்பில் அவர் விசாரிக்கப்பட்டு வருகிறார். அந்த மருத்துவருடன் தொடர்புடைய நான்கு மருந்தகங்களுக்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு முன்னதாக நடத்தப்படும் ஏஆர்டி பரிசோதனையை, தடுப்பூசிக்கு எதிரான 'ஹீலிங் த டிவைன்' என்ற அமைப்பை ஏற்படுத்திய திருவாட்டி ஐரிஸ் கோவுடன் சேர்ந்து, தொலைவில் இருந்தபடி நடத்தித்தர அந்த மருந்தகம் முன்வந்ததாகக் கூறப்படுகிறது. அது பற்றியும் அமைச்சு விசாரித்து வருகிறது.
சென்ற ஆண்டு டிசம்பரில் தனக்கு ஒரு தகவல் கிடைத்ததை அடுத்து அந்த மருந்தகத்தைத் தான் கவனித்து வருவதாக அமைச்சு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
தனிப்பட்டவர்கள் சுயமாக ஏஆர்டி பரிசோதனை செய்துகொள்வதைக் காட்டும் காணொளிகளை அல்லது படங்களைத் தன்னிடம் அனுப்பிவைக்க அந்த மருந்தகம் அனுமதித்ததாகக் கூறப்படுகிறது. அந்த மருந்தகம் அவற்றை அனுப்பியோருக்குத் தொற்று இல்லை என்று பரிசோதனை முடிவைத் தெரியப்படுத்தும்.
தொற்றுநோய் (ஏஆர்டி பரிசோதனையாளர்கள்) விதிமுறைகள் 2021ன்படி, நிகழ்ச்சிக்கு முந்திய பரிசோதனையை உரிய நேரத்தில், பதிவு பெற்ற மருத்துவர் அல்லது தகுதி உள்ள சுய பரிசோதனை மேற்பார்வையாளர் முன்னிலையில்தான் நடத்த வேண்டும்.
சம்பந்தப்பட்ட மருந்தகத்தைச் சேர்ந்த மருத்துவரான ஜிப்சன் சியா, 33, தடுப்பூசி போட்டுக்கொள்ளாத தனிப்பட்டவர்களுக்காக தடுப்பூசி ஆவணங்களில் போலியான தகவல்களை இடம்பெறச் செய்து இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
தடுப்பூசி போட்டுக்கொள்ளாத நிலையில் இருந்தவர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டுவிட்டதாகக் காட்டும் வகையில் போலியான தகவல்களைத் தேசிய நோய்த்தடுப்பாற்றல் பதிவகத்திடம் தாக்கல் செய்து அதன் மூலம் அந்த மருத்துவர் இதைச் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
ஏஆர்டி பரிசோதனை முடிவு களையும் நோயாளிகள் பற்றிய இதர தகவல்களையும் பதிவேற்று வதற்காக 'நோயாளி இடர்நிலை களஞ்சியம்' என்ற தேசிய சுகாதாரப் பராமரிப்புத் தளத்தை மருத்துவர்கள் பயன்படுத்துகிறார்கள்.
தொற்று இருந்ததாகக் கூறும் போலியான ஏஆர்டி பரிசோதனை முடிவு ஒன்றை அந்த மருத்துவர் அத்தளத்திற்கு அனுப்பி இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
அமைச்சு வெள்ளிக்கிழமை காவல்துறையிடம் புகார் செய்தது. மருத்துவரையும் தாமஸ் சுவா என்ற அவரின் 40 வயது உதவியாளரையும் காவல்துறை கைது ெசய்தது. அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டு உள்ளது.

