சிங்கப்பூர் விமான கண்காட்சி பிப்ரவரியில் நடக்கும். இருந்தாலும் அதில் கலந்துகொள்ளும் நிறுவனங்கள் குறைவாகவே இருக்கும்.
முந்திய கண்காட்சியுடன் ஒப்பிடுகையில் இப்போது ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கு நிறுவனங்கள் மட்டுமே ஆர்வம் காட்டி இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
கொவிட்-19 கட்டுப்பாடுகளே இதற்கான காரணம்.
வழிவழியாக நடந்து வரும் விமானப் போக்குரத்து உச்சநிலை சந்திப்பும் ரத்தாகி இருக்கிறது.
சிங்கப்பூர் விமான கண்காட்சி பிப்ரவரி 15 முதல் பிப்ரவரி 18 வரை சாங்கி கண்காட்சி நிலையத்தில் நடக்கும்.
பொதுமக்கள் கலந்துகொள்ள இயலாது. இதுவரையில் இந்த ஆண்டு கண்காட்சியில் 321 நிறுவனங்கள் மட்டுமே தாங்கள் கலந்துகொள்வதை உறுதிப்படுத்தி இருப்பதாக பட்டியல் மூலம் தெரியவருகிறது. இந்தக் கண்காட்சிக்கு எக்ஸ்பீரியா என்ற நிறுவனம் ஏற்பாடு செய்கிறது.
கண்காட்சியையொட்டி நடைபெறும் சிங்கப்பூர் விமான கண்காட்சி விமானப் போக்குவரத்து தலைமைத்துவ உச்சநிலை மாநாடு என்ற சந்திப்புக்கு போக்குவரத்து அமைச்சு இணைந்து முன்பு ஏற்பாடு செய்தது.
அந்தச் சந்திப்பை பின்னொரு தேதியில் நடத்த திட்டமிடுவதாக அமைச்சு கூறியது என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரிலும் இதர நாடுகளிலும் கடைப்பிடிக்கப்படும் எல்லை கட்டுப்பாடுகள் காரணமாக முக்கியமான வாடிக்கையாளர்களும் உயர்நிலை நிர்வாகிகளும் சிங்கப்பூருக்கு வருவதை ஒத்தி வைப்பார்கள் என்று தகவல் வட்டாரங்கள் தெரிவித்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது.
விமான கண்காட்சியின்போது இதர பல கட்டுப்பாடுகள் இருக்கும் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
கொவிட்-19 தொற்று தலைகாட்டிய தொடக்க காலத்தில் அதாவது, கடந்த 2020ல் நடந்த கண்காட்சியில் கடைசியில் திடீரென ஏறத்தாழ 70 நிறுவனங்கள் தாங்கள் கலந்துகொள்ளவில்லை என்று அறிவித்துவிட்டன.
அப்போது ஏறத்தாழ 930 நிறுவனங்கள் பங்கெடுத்தன.

