'ட்ரீம் குரூசஸ்' என்ற உல்லாசப் பயணக் கப்பல் நிறுவனம் தொடக்கமாக இரண்டு வார காலத்துக்குப் புதிய கப்பல் பயண முன்பதிவுகளைத் தற்காலிகமாக நிறுத்திவைத்து உள்ளது.
அந்த நிறுவனத்தின் தாய் நிறுவனமான 'ஜென்டிங் ஹாங்காங்' நிறுவனம் இதனை நேற்று அறிவித்தது.
ஜென்டிங் ஹாங்காங் நிறுவனம் தன்னுடைய கடனை அடைப்பதற்குப் போதிய பணத்தைப் பெற முடியாமல் போய்விட்டது. அதையடுத்து அந்த நிறுவனத்தைக் கலைத்துவிடுவதற்கான விண்ணப்பம் சென்ற புதன்கிழமை தாக்கலானது. இத்தகைய நிலையில், முன்பதிவு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
முன்பதிவு நிறுத்தம் இம்மாதம் 21ஆம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 4ஆம் தேதி வரை அது நீடிக்கும் என்று ஜென்டிங் ஹாங்காங் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.
இந்த நடவடிக்கை, ட்ரீம் குரூசஸ் விருந்தினர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக இடம்பெறுகிறது என்று நிறுவனம் குறிப்பிட்டு உள்ளது.
நிறுவனத்தைக் கலைத்துவிடுவதற்கான விண்ணப்பம் தாக்கலானதை அடுத்து அதன் தொழில் நிலவரங்களைப் பற்றி கூட்டுத் தற்காலிக கலைப்பாளர்கள் பலவற்றையும் ஆராய்ந்து வருகிறார்கள்.
இதனிடையே, நேற்று ட்ரீம் குரூசஸ் இணையத்தளத்திற்குச் சென்றபோது, அதில் உல்லாசப் பயணக் கப்பல் பற்றிய விளம்பரங்களை நேற்றும் காண முடிந்தது. ஆனாலும் முன்பதிவுக்கு முயன்றபோது பதில் இல்லை.
கொவிட்-19 தொற்று சூழலில் சிங்கப்பூரில் மகிழ்உலா சேவைகளை நடத்த இரண்டு உல்லாசக் கப்பல் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
அவற்றில் ட்ரீம் குரூசஸ் நிறுவனத்தின் 'வேல்டு ட்ரீம்' என்ற கப்பல் ஒன்று. ராயல் கரீபியன் நிறுவனத்தின் 'குவாண்டம் ஆஃப் த சீஸ்' என்பது மற்றொரு கப்பலாகும்.
ஜென்டிங் ஹாங்காங் நிறுவனம் கலைப்பு விண்ணப்பத்தைத் தாக்கல் செய்து இருந்தாலும்கூட சிங்கப்பூரில் தன் செயல்முறைகள் தொடரும் என்று ட்ரீம் குரூசஸ் தெரிவித்து இருந்தது.
அதற்கு மூன்று நாள் கழித்து முன்பதிவுகள் ரத்தாகி உள்ளன.
ஜென்டிங் ஹாங்காங் நிறுவனத்துக்குச் சொந்தமாக 'ஸ்டார் குரூசஸ்', 'கிறிஸ்டல் குரூசஸ்' என்ற இதர இரு உல்லாசப் பயண நிறுவனங்களும் இருக்கின்றன.

