கி. ஜனார்த்தனன்
ஒரு கட்டத்தில் பயணிகளின் உயிரைக் காக்கும் விமானியாக, வானில் வலம்வந்தவர் ஜீவன் ஜோதி. இன்று உயிரில்லா உடல்
களுக்கு உயிரூட்டக்கூடிய ஒரு வித்தியாசமான தொழிலில் அவர் இருக்கிறார். உயிரற்ற விலங்கு
களின் உடல்களை, தத்ரூபம் குறையாமல் கலைப்பொருள்களாக மாற்றும் 'டாக்சிடர்மி' (taxidermy) பணியில் 31 வயது ஜீவன் உள்ளார்.
மனைவி திருமதி விவியன் தாம் ஈடுபட்டு வரும் இந்த 'பாடம் செய்தல்' தொழிலுக்கு உற்ற துணையாக இருக்கிறார் ஜீவன்.
'பாடம் செய்தல்' என்றால்...
இறந்த தங்களது செல்லப்பிராணிகளின் உடல்களை அழியாமல் பாதுகாத்துத் தங்களுடனே வைத்திருக்கவேண்டும் என விரும்பும் சிலர், சைனாடவுன் வட்டாரத்திலுள்ள இந்தத் தம்பதியரின் 'பிளாக் குரோ டாக்சிடர்மி அண்ட் ஆர்ட்' என்ற கடையை நாடுகிறார்கள். பூனை, நாய், கிளி, எலி, முயல், ஹேம்ஸ்டர் உள்ளிட்ட விலங்குகளின் தோலைப் பக்குவமாக அகற்றி, கம்பியால் அல்லது வேறு உலோகத்தால் செய்யப்பட்ட அவ்விலங்குகளின் மாதிரி வடிவங்களின் மீது விவியன் ஒட்டுவார்.
இதன்வழி, அசல் விலங்கின் தோற்றத்தையும் முழுத் தோலையும் கொண்டுள்ள ஒரு பொம்மை உருவாக்கப்படுகிறது. செல்லப்பிராணிகள் மட்டுமின்றி விலங்குகளை ஆராய்ச்சி செய்ய விரும்புவோரும் இத்தம்பதியின் சேவையை நாடி வருகின்றனர். வண்ணத்துப்பூச்சி, தும்பி, தவளை, வௌவால் என இயற்கை ஆர்வலர்கள் கொண்டு
வரும் உயிரினங்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.
ஒவ்வொன்றுக்கும் செலவாகும் நேரம், அதன் உருவ அளவைப் பொறுத்திருக்கும் என்றும் அதைத் தயாரிக்க, ஒரு வாரம் முதல் இரண்டு மாதம் வரை ஆகலாம் என்றும் விவியன் கூறினார்.
இவ்வாறு உடல்கள் பதப்படுத்தப்பட்டதும் அவை கண்ணாடிப் பேழை அல்லது சட்டம் ஒன்றில் வைக்கப்பட்டு கலைப்பொருளாக விற்கப்படுகின்றன.
சவால் விடுத்த படைப்புகள்...
தாங்கள் இதுவரை செய்தவற்றிலேயே பாம்பின் முதுகெலும்பின் பாகங்களை ஒட்டி மீண்டும் அதை முழுமையாக்கும் பணிதான் மிகச் சவாலாக இருந்ததாக தம்பதியர் பகிர்ந்துகொண்டனர்.
"பாம்புக்கு முதுகெலும்பு இருப்பதே பலருக்கும் தெரிவதில்லை. வளைந்து நெளிந்து போகும் அதன் உடலுக்குரிய முதுகெலும்பு மிகவும் நுணுக்கமானது," என்று கூறினார் விவியன்.
மலேசியாவில் இவ்வாறு 'பாடம் செய்த' ஒரு குதிரையே தாங்கள் இதுவரை செய்திருக்கும் ஆகப் பெரிய படைப்பு என்று கூறினர்.
பிறர் கண்ணுக்கு...
இத்தகைய கலைப்பொருள்களை சிலர் ஆச்சரியத்துடன் ரசித்தாலும் ஒரு சிலர் அச்சத்தில் தள்ளிப்போவதும் உண்டு. பார்ப்பதற்கு திகிலூட்டுகிறது என்றது ஒரு கூட்டம், இது தவறு என மற்றொரு கூட்டம் கூறியதாக தம்பதியர் தெரிவிக்கின்றனர்.
"ஜீவன் தொடர்ந்து எனக்குப் பக்கபலமாக இருந்து வருகிறார். நான் செய்ததைக் கண்டு அஞ்சவும் இல்லை, இதை நிறுத்தச் சொல்லவும் இல்லை. மாறாக, என் தொழிலைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள இவர் காட்டும் ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது," என்று விவியன் கூறினார்.
மனைவி ஈடுபட்டிருக்கும் இத்தொழிலை, தாம் அறிவியல் கண்ணோட்டத்துடன் காண்பதால் அது பயங்கரமாகவோ தவறாகவோ தமக்குத் தோன்றவில்லை என்றார் ஜீவன்.
தங்களிடம் ஒப்படைக்கப்படும் ஒவ்வொரு விலங்கின் மூலம் தாங்கள் பலவற்றைக் கற்றுக்கொள்வதாக ஜீவன் குறிப்பிட்டார்.
"பாடம் செய்யும் கலையை என் மனைவியிடம் ஓரளவு அறிந்திருக்கிறேன். இந்தக் கடையை நிர்வகித்து இதன் வர்த்தகத் தேவைகளை தெரிந்துகொள்ள இப்புரிந்துணர்வு உதவுகிறது," என்று அவர் கூறினார்.
தம்பதியரின் பயணம்...
ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அப்போது மலேசியாவின் சரவாக் மாநிலத்திலுள்ள 'யூனிவர்சிட்டி மலேசியா' பல்கலைக்கழகத்தில் விலங்கியல் துறை தொடர்பான பட்டப்படிப்பை விவியன் மேற்கொண்டிருந்தார்.
"தொடக்கத்தில் நான் விலங்கு மருத்துவர் ஆக ஆசைப்பட்டேன். ஆனால் அதற்கான இடம் கிடைக்கவில்லை," என்று மலேசியாவின் கூச்சிங் நகரில் வளர்ந்த விவியன் தெரிவித்தார்.
இருந்தபோதும் இளநிலைப் பட்டப்படிப்பின்போது விலங்கு வகை
களின் பாகங்களைப் பற்றி தாம் கற்றுக்கொண்டதாக விவியன் தெரிவித்தார்.
நோயியல் துறை சார்ந்த முதுநிலைப் பட்டப்படிப்பை அவர் மேற்கொண்டபோது, உயிரற்ற உடல்
களையும் அவற்றின் பாகங்களையும் எவ்வாறு தீர ஆராய்வது என்பதைக் கற்றுக்கொண்டார்.
வர்த்தக நிறுவனம் ஒன்றில் முழுநேர வேலை புரியும் ஜீவன், வர்த்தகத்தை நடத்துவதிலும் தமது மனைவிக்குத் தேவைப்படும் வளங்களைத் திரட்டுவதிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
"சிங்கப்பூரில் இந்தச் சேவையைக் காண்பது அரிது. இருப்பினும் எங்கள் சேவைக்கான கட்டணத்தை நாங்கள் கட்டுப்படியாகும் விதமாக வைத்திருக்கிறோம்," என்றார் ஜீவன். இச்சேவைக்கு உரிய அனுமதியைப் பெறுவதற்காக இந்தத் தம்பதியர், பல அரசாங்க அமைப்புகளை அணுகியுள்ளனர்.
கோரிக்கைகள் பலவிதம்...
தங்களுக்கு வந்துள்ள விநோதமான கோரிக்கைகளைப் பற்றி கேட்டபோது, "அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றப்பட்ட மனித உடல் பாகங்களைப் பாதுகாக்கும்படி சில நோயாளிகளிடமிருந்து அழைப்புகள் வந்துள்ளன. கலைக்கப்பட்ட கருவை வேறு சிலர் பாதுகாக்க எண்ணி எங்களை அணுகியதுண்டு. நாங்கள் அவர்களுக்காக அனுதாபம்தான் படமுடியும். இந்த வேண்டுகோள்களை ஏற்கும் நிலையில் நாங்கள் இல்லை," என்றார் விவியன்.
பயிலரங்குவழி விழிப்புணர்வு...
பயிலரங்குகளின் வழி 'பாடம் செய்யும்' கலையைப் கற்றுத்தருவதில் இத்தம்பதியர் ஆர்வம் காட்டி வருகின்றனர். தம்முடைய மனைவியிடம் தாம் கற்றுக்கொண்டது போலவே தயக்கத்தை விடுத்து திறந்த மனதுடன் மற்றவர்களும் தங்களிடம் வருமாறு ஜீவன் கேட்டுக்கொள்கிறார்.
"பூச்சிகளைக் கண்டு எட்டிப் பாயும் சிறார்கள், இந்த அறிவியல் கலந்த கலையின் மூலம் தைரியத்துடன் அதே பூச்சிகளைக் கலைப்பொருள்களாக மாற்றுகிறார்கள்," என்று பெருமிதத்துடன் கூறினார் ஜீவன்.
விலங்குநல நிபுணர் அறிவுறுத்து...
சாலைகளிலும் பொது இடங்களிலும் சில சமயம் வனவிலங்குகளின் இறந்த உடல்களை நாம் கண்டிருப்போம். அவற்றை உடனே 'பாடம் செய்வதில்' அவசரம் வேண்டாம் என்று 'ஏக்கர்ஸ்' எனப்படும் விலங்கு சார் ஆராய்ச்சி மற்றும் கல்விச் சங்கத்தின் இணைத் தலைமை நிர்வாகி கலைவாணன் பாலகிருஷ்ணன், 35, அறிவுறுத்தி உள்ளார். அதற்குப் பதிலாக முதலில் தங்களின் சந்தேகங்களை, தேசிய பூங்காக் கழக அதிகாரி
களிடம் கேட்டுத் தெளிவுபெறுவது நல்லது என்று அவர் தமிழ் முரசிடம் தெரிவித்தார்.
"கடல் ஆமைகள் போன்ற உயிரினங்களைப் பாடம் செய்து வைத்திருப்பதற்கு உரிமம் தேவை. உரிமம் இன்றி வைத்திருப்பது சட்டப்படி குற்றமாகும்," என்றார் அவர்.
"விலங்குகளின் இறந்த உடல்களைக் கலைப்பொருளாக்கும் இப்பணி அர்த்தமுள்ளது. மக்கள் இயற்கையின் பன்முகத்தன்மையை இதன் மூலம் ரசிக்கலாம், கற்றுக்கொள்ளலாம். ஆனால் பொது இடங்களில் இறந்து கிடக்கும் விலங்குகளைப் பாடம் செய்வதற்குமுன் அதிகாரிகள் ஆலோசனையைப் பெற மறவாதீர்," என்று திரு கலைவாணன் கேட்டுக்கொண்டார்.
மனோதத்துவ நிபுணர் கருத்து...
செல்லப்பிராணிகள் மனிதனின் மனநலனுக்கு பங்காற்ற வல்லவை. அதனால் அவை இறக்கும்போது உரிமையாளருக்குத் துயரம் ஏற்படவே செய்யும் என்று மனோதத்துவ நிபுணர் நரசிம்மன்
திவாசிகமணி, 37, கூறினார்.
ஆனால், இத்துன்பத்தைச் சிலர் புரிந்துகொள்வதில்லை. செல்லப்பிராணியை இழந்தோர், தங்களின் வலியை வெளிப்படுத்த இதுபோன்ற 'பாடம் செய்தல்' முறையைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.
"தங்களது செல்லப் பிராணியின் உடலை இவ்வாறு பாதுகாப்பதை ஒருவித மரியாதைச் செயலாக பிறர் புரிந்துகொண்டால் இக்கலையை ஏளனப்படுத்துவது முறையல்ல என்று உணர்வர்," என்றார் அவர்.

