ஐந்து முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு முன்பதிவு தேவையில்லை. பெற்றோருடன் வந்து எப்போது வேண்டுமானாலும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.
இந்தப் புதிய ஏற்பாடு இன்று முதல் அமலுக்கு வருகிறது.
இதற்கு முன்பு உடன்பிறந்தோர் மட்டுமே முன்பதிவின்றி திங்கள் முதல் வியாழன் வரை தடுப்பூசி போட்டுக்கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.
புதிய ஏற்பாடு, திங்கள் முதல் வியாழன் வரை மட்டுமே என்று கல்வி அமைச்சும் பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பும் நேற்று வெளியிட்ட கூட்டு அறிக்கை தெரிவித்தன. வெள்ளிக்கிழமையில் இருந்து ஞாயிறு வரையில் முன்பதிவுகள் அதிகமாக இருப்பதால் குழந்தை களுக்கான தடுப்பூசி நிலையங்களில் குழந்தைகள் உடனடியாக தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியாத சூழ்நிலை உள்ளது என்று அறிக்கை விளக்கியது.
தற்போது தங்களது ஐந்து முதல் 11 வயது வரையிலான குழந்தைகளின் தடுப்பூசிக்குப் பதிந்துகொள்ள வேண்டிய பெற்றோர் மற்றும் காப்பாளர்கள் இனி திங்கள் முதல் வியாழன் வரை முன்பதிவின்றி உடனே நிலையத்துக்குச் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று இரு அமைப்புகளும் தெரிவித்துள்ளன.
வெள்ளி முதல் ஞாயிறு வரையிலான நாள்களில் தடுப்பூசி போட விரும்பும் குழந்தைகள் வழக்கம்போல முன்பதிவு செய்ய வேண்டும்.
புதிய ஏற்பாட்டின்கீழ் உடனடியாக தங்களுடைய பிள்ளைகளுக்குத் தடுப்பூசி போட விரும்பும் பெற்றோரும் காப்பாளர்களும் மாலை 7.00 மணிக்கு முன்பே நிலையத்துக்கு வர வேண்டும்.
யூசோப் இஷாக் உயர்நிலைப் பள்ளி தடுப்பூசி நிலையத்தில் செவ்வாய் கிழமைகளிலிருந்து வியாழன் வரையில் தடுப்பூசி போட்டுக் கொள்வதாக இருந்தால் மாலை 5.00 மணிக்கு முன்பே அங்கு வர வேண்டும்.
உடனே தடுப்பூசி போட விரும்பு வோர் முன்பதிவு செய்திருந்தால் அதனை ரத்து செய்ய வேண்டும் என்று அறிக்கை நினைவூட்டியது.
தடுப்பூசி போட வரும்போது குழந்தையின் அடையாள ஆவணங்களை பெற்றோரும் காப்பாளரும் உடன் கொண்டு வருவது அவசியம். பெற்றோர் கையெழுத் திட்ட ஒப்புதல் கடிதத்தையும் கொண்டு வர வேண்டும்.
சென்ற ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி ஐந்து முதல் 11 வயது வரையிலான 160,000 குழந்தைகள் முதல் தடுப்பூசியைப் போட்டுள்ளனர். 13,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் இரண்டாவது தடுப்பூசியையும் போட்டுள்ளனர்.
உடன்பிறந்ேதாருடன் முன்பதிவின்றி தடுப்பூசி போட்டுக் கொள்ளும் ஏற்பாட்டின் மூலம் 13,000 குழந்தைகள் பலன் அடைந்து உள்ளனர்.

