இரட்டையர் கொலை: தந்தை மீது கொலைக்குற்றம்

இரட்டையர் கொலை: தந்தை மீது கொலைக்குற்றம்

2 mins read
e3e3e574-2c24-4837-92b7-bc26bf9d24f8
இறந்த இரட்டையரின் சகோதரியுடன், அக்குடும்பத்தின் நண்பரும் இறுதிச் சடங்கு நடத்துநருமான திரு ஃபோங் சுன் சியோங். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

அப்பர் புக்கிட் தீமா ரோட்டில் உள்ள கால்வாய்க்குள் இறந்த கிடந்த 11 வயது இரட்டைச் சகோதர்களின் தந்தை மீது நேற்று கொலைக் குற்றம் சுமத்தப்பட்டது.

மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று காணொளி வழியாக முன்னிலையான 48 வயது ஸேவியர் யாப் ஜுங் ஹோன்னிடம் குற்றப் பத்திரிகை படித்துக்காட்டப்பட்டது.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை 4.23 மணிக்கும் 6.25 மணிக்கும் இடையில் தனது மகன் ஈத்தன் யாப் இ செர்ன்னை, கிரீன்ரிட்ஜ் கிரசெண்டில் உள்ள மூடப்பட்ட கால்வாயில் கொலை செய்தார் என்று குற்றம் சாட்டப்பட்டது.

வெள்ளை நிற டி-சட்டை, நீல நிற முகக்கவசத்துடன் காட்சியளித்த திரு யாப், குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது அமைதியாக இருந்தார்.

புலனாய்வுக்காகவும் சம்பவ இடத்துக்குச் சென்று வருவதற்காகவும் யாப்பை ஒரு வாரம் விசாரணைக் காவலில் வைக்க போலிஸ் வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார்.

நேற்று ஒரு குற்றச்சாட்டு மட்டும் வாசிக்கப்பட்டது. மற்றொரு சிறுவனான எஷ்டன் யாப்பின் மரணம் குறித்து நீதிமன்றத்தில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. வழக்கு இன்னும் விசாரணை அளவில் உள்ளதால் மேல் விவரம் தர இயலாது என்று காவல் துறை தெரிவித்தது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் யாப்புக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.

நீதிமன்றத்தில் பேசிய யாப்பின் வழக்கறிஞர் திரு அனில் சிங் சந்து, "இரு இளம் பிள்ளைகளை இழந்து அந்தக் குடும்பம் பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளது. இச்சம்பவம் குறித்து ஊடகத் துறையினர் மிகவும் ஆர்வத்துடன் செய்தி சேகரிக்க வந்துள்ளனர். ஆனால், துயரத்தில் உள்ள குடும்பத்தினரின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்," என்றார்.

யாப்பின் வழக்கு இம்மாதம் 31ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்துக்கு வரும்.

இதற்கிடையே, மாண்ட இரட்டையர் எஷ்டன், ஈத்தன் யாப்பின் உடல்கள் நேற்று பிற்பகல் இறுதிச் சடங்கு நடத்துநரிடம் ஒப்படைக்கப்பட்டது.

நேற்று பிற்பகல் 2 மணிக்கு இரட்டையரின் அக்கா சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் உள்ள சவக்கிடங்குக்கு வந்தார். சிறிது நேரத்தில் சிறுவர்களின் உடல்களைச் சுமந்த இரு வாகனங்கள் அங்கிருந்து புறப்பட்டன.

கடந்த நான்கு நாட்களாக சிறுவர்களின் உடல்கள் பதப்படுத்தப்படவில்லை என்பதால் அவற்றை விரைவில் தகனம் செய்யுமாறு மாண்ட சிறுவர்களின் குடும்பத்திடம் தாம் ஆலோசனை கூறியதாக அக்குடும்பத்தின் நண்பரும் இறுதிச் சடங்கு நடத்துநருமான திரு ஃபோங் சுன் சியோங் தெரிவித்தார்.

நேற்று இரவு 9 மணிக்கு சிறுவர்களின் உடல்கள் மண்டாய் தகனச் சாலையில் எரியூட்டப்பட்டன.