மியன்மாரில் நிலவும் நெருக்கடி கவலையளிப்பதாக உள்ளது என்றும் அதற்கும் அமைதியான வழியில் தீர்வுகாணப்பட வேண்டும் என்றும் பிரதமர் லீ சியன் லூங்கும் இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோவும் வலியுறுத்தியுள்ளனர்.
மியன்மாரில் மோசமான நிலை நீடிப்பதாகக் கூறிய பிரதமர் லீ, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் எட்டப்பட்ட ஆசியானின் ஐந்து அம்ச கருத்திணக்கத்தை நடைமுறைப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.
சென்ற ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி மியன்மாரில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. அதனை அடுத்து, அங்கு கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறையை உடனடியாக நிறுத்த வேண்டும், மனிதாபிமான உதவி கிட்ட வழிவகை செய்ய வேண்டும், சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்புகளுடனும் ஆக்ககரமான பேச்சுவார்த்தை இடம்பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அந்த ஐந்து அம்சத் திட்டம் உள்ளடக்குகிறது.
அந்த அமைதித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் முக்கியத்துவத்தை அதிபர் ஜோக்கோவி மீண்டும் வலியுறுத்திக் கூறினார்.
"இது ஆசியானில் உயர்மட்ட அளவில் எடுக்கப்பட்ட முடிவு. இதனை அனைவரும் மதிக்க வேண்டும்," என்றார் அவர்.
ஆசியான் தலைமையும் அதன் சிறப்புத் தூதரும் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்புகளையும் அதில் ஈடுபடுத்துவது அவசியம் என்று பிரதமர் லீ வலியுறுத்தினார்.
மியன்மார் மக்களின் பாதுகாப்பும் நல்வாழ்வும் மிக முக்கியம் என்பதை இருநாட்டுத் தலைவர்களும் ஒத்துக்கொண்டனர்.
"மியன்மார் மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு, அங்கு அமைதியான, நீடித்து நிலைக்கத்தக்க தீர்வை எட்ட உதவுவதில் கடப்பாடு கொண்டுள்ளோம்," என்று திரு லீ சொன்னார்.
அங்கு பாகுபாடின்றி மனிதாபிமான உதவிகளை மேற்கொள்ள ஊக்குவிப்பதாக அதிபர் ஜோக்கோவி தெரிவித்தார்.

