சிங்கப்பூரில் கடந்த ஆண்டு
சுற்றுப்பயணிகளின் வருகை இதுவரை இல்லாத அளவில் குறைந்தது. 2020ஆம் ஆண்டைக் காட்டிலும் சுற்றுப்பயணிகளின் வருகை கடந்த ஆண்டு 80 விழுக்காட்டுக்கும் மேல் சரிவு கண்டது.
கடந்த ஆண்டு சிங்கப்பூருக்கு 330,000 அனைத்துலகச் சுற்றுப்
பயணிகள் மட்டுமே வந்திருந்தனர்.
சுற்றுப்பயணிகள் செய்த செலவு பாதிக்கும் மேல் குறைந்து தோராயமாக $1.9 பில்லியனாகப் பதிவானதாக சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் நேற்று வெளியிட்ட ஆரம்பக்கட்ட தரவுகள் காட்டுகின்றன.
2020ஆம் ஆண்டில் சிங்கப்பூருக்கு 2.7 மில்லியன் சுற்றுப்
பயணிகள் வந்தனர்.
அவர்கள் மூலம் சிங்கப்பூர் பயணத்துறைக்கு $4.8 மில்லியன் வருமானம் கிடைத்தது.
சுற்றுப்பயணிகளின் வருகை குறைந்துள்ளபோதிலும் நாட்டின் மீட்சிக்கான அறிகுறிகள் நம்பிக்கை அளிக்கும் வகையில் இருப்பதாகக் கழகம் கூறியது.
உதாரணத்துக்கு, தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயணப் பாதையின் அறிமுகம் காரணமாகச் சுற்றுப்பயணிகளின் வருகை படிப்படியாக அதிகரிக்கிறது.
2020ஆம் ஆண்டின் கடைசி மூன்று காலாண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டின் கடைசி மூன்று காலாண்டுகளில் சுற்றுப்பயணிகளின் வருகை 221 விழுக்காடு ஏற்றம் கண்டது.
கடந்த ஆண்டின் இரண்டாம், மூன்றாம் காலாண்டுகளில் சுற்றுப்பயணிகள் செய்த செலவு 2020ஆம் ஆண்டின் அதே காலக்கட்டத்துடன் ஒப்பிடும்போது 92 விழுக்காடு அதிகம்.
கடந்த ஆண்டு சிங்கப்பூருக்கு வந்த சுற்றுப்பயணிகளில் பெரும்பாலானோர் சீனா, இந்தியா, இந்தோனீசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
சீனாவிலிருந்து 88,000 சுற்றுப்பயணிகளும் இந்தியாவிலிருந்து 54,000 சுற்றுப்பயணிகளும் இந்தோனீசியாவிலிருந்து 33,000 சுற்றுப்பயணிகளும் சிங்கப்பூருக்கு வந்தனர்.
கடந்த ஆண்டு ஜனவரி மாதத்துக்கும் செப்டம்பர் மாதத்துக்கும் இடைப்பட்ட காலக்கட்டத்தில் சிங்கப்பூருக்கு சுற்றுப்பயணிகள் மூலம் $1.2 பில்லியன் வருமானம் கிடைத்தது.
சீனாவைச் சேர்ந்த சுற்றுப்பயணிகள் $432 மில்லியனும் இந்தோனீசிய சுற்றுப்பயணிகள் $127 மில்லியனும் இந்தியாவைச் சேர்ந்த சுற்றுப்பயணிகள் $58 மில்லியனும் செலவு செய்தனர்.
நாட்டைச் சுற்றிப் பார்ப்பது, பொழுதுபோக்கு அம்சங்கள், விளையாட்டு ஆகியவற்றுக்கான செலவு இதில் சேர்க்கப்படவில்லை.
"கொவிட்-19 நெருக்கடிநிலைக்கு முன்பு பதிவான சுற்றுப்பயணிகள் எண்ணிக்கையை மீண்டும் எட்ட மேலும் பல நாள்களாகும். இருப்பினும், நமது பயணத்துறை வர்த்தகங்களின் மீள்திறனும் தரமான வேலைகளைப் பாதுகாக்க அவை கொண்டுள்ள கடப்பாடு, வர்த்தகத்தை உருமாற்ற அவை மேற்கொள்ளும் முயற்சிகள், புதிய பொருட்கள், அனுபவங்களில் முதலீடு செய்ய அவற்றுக்கு இருக்கும் துணிவு ஆகியவை ஊக்குவிக்கும் வகையில் உள்ளன," என்று சிங்கப்பூர் பயணத்துறைக் கழகத்தின் தலைமை நிர்வாகி கீத் டான் கூறினார்.
செய்தியாளர் கூட்டத்தில் நேற்று பேசிய திரு டான், இவ்வாண்டு சிங்கப்பூரின் சுற்றுப்பயணத் துறையின் நிலை எவ்வாறு இருக்கும் என்பதைக் கணிப்பது சிரமம் என்று தெரிவித்தார். நிச்சயமற்ற நிலை தொடர்வதாகவும் எதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

