பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு சிங்கே உணர்வை ஏற்படுத்த சிங்கே மிதவைகள் போன்று 20 பேருந்துகள் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இப்பேருந்துகள் முந்தைய ஆண்டுகளில் பொதுமக்களைப் பிரமிக்கவைத்த சிங்கே மிதவைகளை நினைவுப்படுத்துகின்றன.
பேருந்துகளின் உட்புறப் பகுதிகள் மிகவும் அழகாக அலங்கரிக்கப்பட்டு பிரகாசமாகக் காட்சியளிக்கின்றன. ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள கியூஆர் குறியீட்டை வருடி, முந்தைய சிங்கே ஊர்வலங்களில் பங்கெடுத்த கலைஞர்கள், தொண்டூழியர்கள். பார்வையாளர்கள் ஆகியோரின் அனுபவங்களைப் பற்றி பயணிகள் தெரிந்துகொள்ளலாம்.
சிங்கே மிதவைகள் போன்று அலங்கரிக்கப்பட்டுள்ள இப்பேருந்து கள் லிட்டில் இந்தியா, சைனா
டவுன், கேலாங் சிராய், குடிமை வட்டாரம் ஆகிய பகுதிகளில் வரும் மார்ச் மாதம் 27ஆம் தேதி வரை போக்குவரத்துச் சேவையை வழங்கும். பேருந்துகளுக்கு அழகு சேர்க்க 14 வடிவமைப்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. உள்ளூர் ஓவியக் கலைஞர் சாம் லோவின் வடிவமைப்பும் இவற்றில் அடங்கும். சிங்கே ஊர்வலத்தின் 50வது ஆண்டு விழா இவ்வாண்டு கொண்டாடப்படுகிறது. இந்தக் கொண்டாட்டத்தின் ஓர் அம்சமாக இந்த வடிவமைப்பு இடம்பெறும்.
இந்த 'சிங்கே 50' பேருந்துகளை கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சரும் மக்கள் கழகத்தின் துணைத் தலைவருமான எட்வின் டோங் நேற்று காலை அறிமுகப்படுத்தி வைத்தார்.
"சிங்கப்பூரில் ஒவ்வோர் ஆண்டும் சிங்கே ஊர்வலம் நடைபெறுகிறது. இது நம் வாழ்வின் ஒரு பகுதியாகிவிட்டது. சிங்கே ஊர்வலம் தொடங்கி 50 ஆண்டுகள் ஆகிவிட்டன என்று நினைக்கும்போது ஆச்சரியமாக உள்ளது.
"சாதாரண ஊர்வலமாகத் தொடங்கிய இந்த நிகழ்வு, புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் ஒரு முக்கிய பகுதியாகிவிட்டது. சிங்கப்பூரின் கலாசாரத்தை இந்த ஊர்வலம் எழிலுற காட்டுகிறது.
"முந்தைய சிங்கே ஊர்வலங்
களுக்கு அழகு சேர்த்த மிதவைகளை பலர் பார்த்திருக்க வாய்ப்பில்லை. எனவே வெவ்வேறு பயணப் பாதைகளில் செல்லும் பேருந்துகள் அக்கால சிங்கே மிதவைகள் போல அலங்கரிக்கப்பட்டுள்ளன. இதனால் அவற்றை மேலும் பலர் கண்டு மகிழ முடியும். அதுமட்டுமல்லாது அவற்றில் சுவாரசியமான அனுபவமும் அவர்களுக்குக் கிடைக்கும். இதனால் கொண்டாட்ட உணர்வைப் பயணிகளால் உணர முடியும்," என்று அமைச்சர் டோங் தெரிவித்தார்.
முன்பு சிங்கே மிதவைகளைக் காண பொதுமக்கள் சாலையோரம் காத்துக்கொண்டிருப்பர். குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகில் உள்ள சாலைகளின் வழியாக மிதவைகள் செல்லும்போது அவற்றைப் பொதுமக்கள் பார்த்து ரசித்தனர். சிங்கேயின் 50வது ஆண்டு விழாவை முன்னிட்டு இதை மீண்டும் நடப்புக்குக் கொண்டு வர நாங்கள் விரும்பினோம். அதே சமயம் கொவிட்-19 சூழலைக் கருத்தில் கொண்டு பாதுகாப்பான முறையில் கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
"பொதுமக்களை ஒன்றிணையச் செய்து நமது மக்கள், கலாசாரம், மரபுடைமை ஆகியவற்றைக் கொண்டாடுவதே சிங்கே விழாவின் இலக்கு. சிங்கே ஊர்வலம் சிங்கப்பூரர்களின் தனித்துவம் வாய்ந்த பாரம்பரியம். இது தொடர்வது முக்கியம். கடந்த 50 ஆண்டுகளாக, தலைமுறை தலைமுறையாக இந்த ஊர்வலம் நடத்தப்பட்டு வருகிறது," என்று மக்கள் கழகத்தின் கலைகள், கலாசாரப் பிரிவு இயக்கு
நரான திருவாட்டி டான் சுவீ லெங் தெரிவித்தார்.