குழந்தையின் முதல் ஆண்டில் அதன் அசைவுகளும் பேச்சும், குழந்தையின் வளர்ச்சி குறித்த அறிகுறிகளாக இருக்கலாம். ஆனால், இது சில காலத்துக்கு கவனிக்கப்படாமல் போகக்கூடும்.
சரியான பருவத்தில் குழந்தை
புரளாமல் இருப்பது போன்ற அம்சங்கள் பிரச்சினைகளைக் குறிக்கலாம். அதேபோல் ஒரு குழந்தை சத்தத்திற்கு செவி சாய்க்காமல் இருந்தால் அதற்கு மொழியைப் புரிந்துகொள்வதில் குறைபாடு இருக்கலாம்.
வளரும்போது இத்தகைய அம்சங்களின் தொடர்பில் பிள்ளைகளுக்கு சில தேவைகள் இருக்கக்கூடும். அவற்றைக் கண்டறிய 12.1 மில்லியன் வெள்ளி மதிப்புகொண்ட திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
குழந்தை பிறந்து இரண்டாம் மாதத்திலிருந்தே அதன் வளர்ச்சிக்கான தேவைகளைக் கண்டறிவது இத்திட்டத்தின் இலக்கு.
இத்திட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டதும் இதனால் இரண்டு மாதங்களுக்கும் நான்கு வயதுக்கும் உட்பட்ட சுமார் 1,800 பிள்ளைகள் பலனடைவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நான்காண்டுகளில் இத்திட்டம் 16 பாலர் பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்படும்.
சம்பந்தப்பட்ட பாலர் பள்ளிகளை 'பிசிஎஃப்' எனும் மக்கள் செயல் கட்சி சமூக அறநிறுவனம் நிர்வகிக்கிறது.
இந்தப் பாலர் பள்ளிகள் பொங்கோலிலும் செங்காங்கிலும் அமைந்துள்ளன.
'எம்ஐபி2' எனும் இத்திட்டத்தில் பல்வேறு நிபுணர்கள் இடம்பெறுவர்.
பிள்ளைகளுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் இத்திட்டம் ஆதரவளிக்கும்.
'பிசிஎஃப்', கேகே மகளிர், சிறார் மருத்துவமனை, லியென் அறநிறுவனம் ஆகியவை இணைந்து திட்டத்தை செயல்படுத்துகின்றன.

