உயர்ந்துவரும் வாழ்க்கைச் செலவினங்களைச் சமாளிக்கும் வகையில், அடுத்த மூன்று ஆண்டுகளில் 600 குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு மொத்தம் $1.2 மில்லியன் மதிப்பிலான பற்றுச்சீட்டுகளை நன்கொடையாக வழங்க பேரங்காடிக் குழுமமான என்டியுசி ஃபேர்பிரைஸ் உறுதியளித்துள்ளது.
சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்தின் 'மீல்ஸ் வித் லவ்' திட்டத்தின்கீழ் பயன்பெற்றுவரும் குடும்பங்களுக்கு இந்தப் பற்றுச்சீட்டுகள் வழங்கப்படும். குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களும் ஒற்றைப் பெற்றோரைக் கொண்டுள்ள குடும்பங்களும் அவற்றில் அடங்கும்.
அக்குடும்பங்களுக்கு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை ஃபேர் பிரைஸ் பற்றுச்சீட்டுகள் வழங்கப்படும். இந்தப் பற்றுச்சீட்டுத் திட்டத்திற்கான தொகையை ஃபேர் பிரைஸ் அறநிறுவனம் திரட்டும்.
உதவிபெறும் குடும்பத்தில் எத்தனை பேர் உள்ளனர் என்ற அடிப்படையில் பற்றுச்சீட்டு வழங்கப்படும். நால்வர் உள்ள குடும்பத்திற்குச் சராசரியாக மாதத்திற்கு $250 மதிப்புள்ள பற்றுச்சீட்டுகள் கிடைக்கும்.
அக்குடும்பங்களின் நிலை குறித்து ஆறு மாதங்களுக்கு ஒருமுறை தொண்டூழியர்கள் மறுஆய்வும் மதிப்பீடும் செய்வர். அதற்கேற்ப, நன்கொடையாக வழங்கப்படும் பற்றுச்சீட்டுகளும் மதிப்பும் மாற்றியமைக்கப்படும்.
என்டியுசியைப் பொறுத்தமட்டில், வாழ்க்கைச் செலவினங்களைச் சமாளிக்க குடும்பங்களுக்கு உதவுவது எப்போதுமே முக்கியமானதாக இருந்து வருகிறது என்று ஃபேர்பிரைஸ் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சியா கியான் பெங் கூறினார்.
கடந்த 2013ஆம் ஆண்டில் இருந்து 'மீல்ஸ் வித் லவ்' திட்டத்தைச் செஞ்சிலுவைச் சங்கம் செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், அத்திட்டத்தின் ஆதரவாளராக ஃபேர்பிரைஸ் இணைந்திருப்பது இதுவே முதன்முறை.
செஞ்சிலுவைச் சங்க இணையத்தளம் வழியாகப் பொதுமக்கள் இத்திட்டத்திற்கு நன்கொடை வழங்கலாம். அல்லது, பற்றுச்சீட்டுகளைச் சேகரித்து, விநியோகித்து, அக்குடும்பங்களுடன் நட்பு பாராட்டும் வகையில் திட்டத்தின் தொண்டூழியராகவும் இணையலாம்.
முதற்கட்டமாக, ஃபேர்பிரைஸ் குழுமத்தின் 30க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இத்திட்டத்தின் தொண்டூழியர்களாக இணைந்துள்ளனர்.

