பருவநிலை மாற்றம் போன்ற பிரச்சினைகளால் உலகம் உணவு விநியோகத்தில் சவால்களை எதிநோக்கிவரும் நிலையில், வேளாண் உணவுப் புத்தாக்கம் மூலமாக சிங்கப்பூர் தனது உணவுப் பாதுகாப்பை மேம்படுத்தி வருகிறது.
சிங்கப்பூரில் வேளாண் உணவுச் சூழலமைப்பு விரைந்த வளர்ச்சியைக் கண்டு வருகிறது. மேம்பட்ட விளைச்சலையும் நீடித்து நிலைக்கத்தக்க உணவுத் தீர்வுகளையும் வழங்கும் தொழில்நுட்பங்களுடன் கூடிய அதிகமான புத்தாக்க நிறுவனங்கள் இங்கு கால்பதித்து வருகின்றன.
கடந்த ஆண்டு புதிய அசையாச் சொத்து முதலீடுகளை ஈர்த்த துறைகளில் இத்துறையும் ஒன்று என சிங்கப்பூர் பொருளியல் வளர்ச்சிக் கழகம் தனது வருடாந்திர மறுஆய்வில் குறிப்பிட்டுள்ளது.
சிங்கப்பூர் சென்ற ஆண்டில் $11.8 பில்லியன் அசையாச் சொத்து முதலீடுகளை ஈர்த்துள்ளது.
உயர்தொழில்நுட்ப வேளாண்துறை 2030ஆம் ஆண்டிற்குள் ஏறக்குறைய 4,700 வேலைகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கப்பூரின் வேளாண் உணவுத் துறை வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வோரில், தாவரம் சார்ந்த உணவு உற்பத்தியாளரான 'நெக்ஸ்ட் ஜென் ஃபுட்ஸ்' நிறுவனமும் ஒன்று. கோழி இறைச்சிக்கு மாற்றாக 'டிண்டல் (TiNDLE)' உணவுப்பொருளை 2021 மார்ச்சில் அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியது. அந்த 'சைவ கோழிக்கறி' இப்போது ஆசியாவிலும் மத்திய கிழக்கு வட்டாரத்திலும் கிட்டத்தட்ட 200 உணவகங்களில் கிடைக்கிறது.
இவ்வாண்டு தொடக்கத்தில் 'சைவ கோழிக்கறி' அமெரிக்காவிலும் ஆண்டிறுதிக்குள் ஐரோப்பாவிலும் அறிமுகப்படுத்த அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஆய்வு, உருவாக்கத்திலும் உற்பத்திப்பொருள் புத்தாக்கத்திலும் கவனம் செலுத்தும் விதமாக, அந்த நிறுவனம் இவ்வாண்டின் பிற்பகுதியில் உணவுத் தொழில்நுட்பப் புத்தாக்க மையத்துடன் இணைந்து புதிய ஆய்வு மையத்தைத் திறக்க இருக்கிறது.