எஸ்பிஎச் மீடியா டிரஸ்ட் நிறுவனம் கடந்த சில மாதங்களாக அதன் திறனாளர், தொழில்நுட்ப ஆற்றலை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
உயர்தர, நம்பகமான செய்தித்துறையை வழங்க திறனாளர், தொழில்நுட்ப மேம்பாட்டில் எஸ்பிஎச் மீடியா டிரஸ்ட் தொடர்ந்து
கவனம் செலுத்தும் என்று அதன் தலைவர் திரு கோ பூன் வான் நேற்று தெரிவித்தார்.
கடந்த டிசம்பர் 1ஆம் தேதியிலிருந்து சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்திடமிருந்து பிரிந்து தனியாகச் செயல்படும் எஸ்பிஎச் மீடியா டிரஸ்ட், திறனாளர், தொழில்நுட்ப மேம்பாட்டில் அதிகம் முதலீடு செய்ய இருப்பதாக திரு கோ கூறினார்.
முதல் சில முதலீடுகளுக்கு ஆதரவு வழங்க அரசாங்கம் இணங்கியிருப்பதாக அவர் கூறினார்.
அரசாங்கம், குலவழிச் சங்கங்கள், சமூக அமைப்புகள் போன்ற மற்ற அமைப்புகளிடமிருந்து நிதி பெறுவது குறித்து நடத்தப்படும் கலந்துரையாடல்கள் சுமுகமாக நடைபெறுவதாக திரு கோ தெரிவித்தார். இதுதொடர்பான அறிவிப்பைக் கூடிய விரைவில் எதிர்பார்க்கலாம் என்றார் அவர்.
நேற்று நடைபெற்ற செய்தி
யாளர் கூட்டத்தில் இத்தகவல்களை திரு கோ வெளியிட்டார்.
அவருடன் எஸ்பிஎச் மீடியா டிரஸ்ட்டின் இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரி பேட்ரிக் டேனியல், ஆங்கில, மலாய், தமிழ்
ஊடகப் பிரிவின் முதன்மை ஆசிரியர் வாரன் ஃபெர்னாண்டஸ், சீன ஊடகக் குழுமத்தின் முதன்மை ஆசிரியர் லீ ஹுவே லெங் ஆகியோரும் திரு கோவுடன் செய்தியாளர் கூட்டத்தில் கலந்துகொண்டனர். லாப நோக்கமற்ற அமைப்பான எஸ்பிஎச் மீடியா டிரஸ்ட்டுக்குத் தலைமை தாங்குகிறார் முன்னாள் அமைச்சரான திரு கோ.
முன்னாள் எஸ்பிஎச் நிறுனத்தின்கீழ் திறமை, தொழில்நுட்ப மேம்பாட்டுக்குப் போதுமான அளவில் முதலீடு செய்யப்படவில்லை என்றார் அவர்.
இந்த இரு பெரு இடை
வெளிகளை உடனடியாகச் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று திரு கோ கூறினார்.
எஸ்பிஎச் மீடியா டிரஸ்ட்டின் செயலிகள், இணைத்தளங்களைப் பயன்படுத்துவோரின் அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில் தொழில்நுட்பத்தில் அதிகம் முதலீடு செய்யப்படும் என்பதை அவர் வலி
யுறுத்தினார்.
புதிய ஊடகப் பயிற்சிக் கழகம்
தனது செய்தியாளர்களின் மின்னிலக்கத் திறன்களையும் பல்லூடக ஆற்றலையும் மேம்படுத்த ஊடகப் பயிற்சிக் கழகம் ஒன்றை அமைக்க எஸ்பிஎச் மீடியா டிரஸ்ட் முதலீடு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபுளோரிடாவில் உள்ள போய்ன்டர் பயிற்சிக் கழகம், ஆக்ஸ்ஃபர்ட் பல்கலைக்கழகத்தில் உள்ள ராய்ட்டர்ஸ் பயிற்சிக் கழகம் போன்ற அனைத்துலக ஊடகப் பயிற்சிக் கழகங்களுடன் எஸ்பிஎச் மீடியா டிரஸ்ட்டின் பயிற்சிக் கழகம் இணைந்து செயல்படும் என்றார் எஸ்பிஎச் மீடியா டிரஸ்ட்டின் ஆங்கிலம், மலாய், தமிழ் ஊடகப் பிரிவின் முதன்மை ஆசிரியர் வாரன் ஃபெர்னாண்டஸ்.
அனைத்துலகப் பயிற்சிக் கழகங்களுடன் இணைந்து இங்குள்ள செய்தியாளர்களுக்குத் தேவையான பயிற்சித் திட்டங்கள், தோழமைத் திட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்படும் என்றார் அவர்.
சிங்கப்பூரில் உள்ள ஒட்டுமொத்த ஊடகத் துறைக்கும் வட்டார நாடுகளைச் சேர்ந்த சில
செய்தியாளர்களுக்கும் தனது பயிற்சித் திட்டங்களை விரிவுபடுத்துவதே எஸ்பிஎச் மீடியா டிரஸ்ட்டின் நீண்டகால இலக்கு என்று திரு ஃபெர்னாண்டஸ் தெரிவித்த்தார்.
புதிய தலைமை நிர்வாக அதிகாரி
எஸ்பிஎச் மீடியா டிரஸ்ட்டின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டதாகவும் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் அதுகுறித்து அறிவிக்கப்படும் என்றும் திரு கோ தெரிவித்தார்.
ஓய்வுபெற்ற பிறகும் புதிய எஸ்பிஎச் மீடியா டிரஸ்ட்டை வழிநடத்த தற்காலிகமாகப் பொறுப்பேற்றுக்கொண்ட திரு பேட்ரிக் டேனியலை அவர் பாராட்டினார்.
"அதில் இருக்கும் சிரமம் எனக்கு நன்றாகத் தெரியும். நானும் ஓய்வுபெற்ற பிறகு மீண்டும் முக்கிய பொறுப்பை ஏற்றுள்ளேன். காரணமாகத்தான் நாங்கள் ஓய்வு பெற்றோம்," என்றார் 69 வயது திரு கோ.
சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்சின் துணை தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பிலிருந்து 2017ஆம் ஆண்டில் திரு பேட்ரிக் டேனியல் ஓய்வுபெற்றார்.
தாய்மொழிக்கு முக்கியத்துவம்
இளம் சிங்கப்பூரர்களிடையே தாய்மொழி பயன்பாட்டை மேம்
படுத்துவது எஸ்பிஎச் மீடியா டிரஸ்ட்டின் முக்கிய இலக்குகளில் ஒன்று என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் கலாசாரம், மரபுடைமை ஆகியவற்றைப் பாதுகாக்க விழையும் பல்வேறு சமூக அமைப்பு களுடன் இணைந்து எஸ்பிஎச் மீடியா டிரஸ்ட் செயல்படும் என்று திரு ஃபெர்னாண்டஸ் கூறினார். அத்துடன், தனது ஊடகச் சேவைகள் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றார் அவர்.
தாய்மொழி ஊடகப் பிரிவை மேம்படுத்தும் நோக்கில் எஸ்பிஎச் மீடியா டிரஸ்ட்டைச் சேர்ந்த தமிழ் முரசு, பெரித்தா ஹரியான் ஆகிய நாளிதழ்களுடன் மட்டுமின்றி மற்ற அமைப்புகள், சங்கங்கள், வட்டார நாடுகளில் உள்ள மற்ற ஊடகங்கள் ஆகியவற்றுடன் எஸ்பிஎச் மீடியா டிரஸ்ட்டின் சீன ஊடகப் பிரிவு செயல்படும் என்று அதன் முதன்மை ஆசிரியர் திருவாட்டி லீ ஹுவே லெங் கூறினார்.
வெளிநாட்டு வாசகர்களையும் சென்றடைய எஸ்பிஎச் மீடியா டிரஸ்ட் தனது முயற்சிகளைத் தீவிரப்படுத்தும் என்றும் திரு ஃபெர்னாண்டஸ் பகிர்ந்துகொண்டார்.

